Published : 10 Apr 2015 10:12 AM
Last Updated : 10 Apr 2015 10:12 AM

ஆஸி.யின் முன்னாள் அசத்தல் ஆட்டக்காரரும் கிரிக்கெட் வர்ணனை மன்னருமான ரிச்சி பெனோ மறைவு

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னரும், சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனோ சிட்னியில் காலமானார். அவருக்கு வயது 84.

தூக்கத்திலேயே உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தோல் புற்று நோயுடன் அவர் நீண்ட காலம் போராடி வந்தார். மேலும், 2013-ம் ஆண்டு கார் விபத்தில் சிக்கிய பின்னரே அவரது இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

மிகச்சிறந்த லெக் ஸ்பின்னரும், சிறந்த பேட்ஸ்மெனும் ஆன ரிச்சி பெனோ ஆஸ்திரேலியாவுக்காக 248 விக்கெட்டுகளை எடுத்தபோது அவர் காலக் கட்டத்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலராகத் திகழ்ந்தார். 1964-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவரது கேப்டன்சியில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை இழந்ததில்லை. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்த பிறகு 7 ஆண்டுகள் கழித்து மீண்டும் 1958-59-களில் ஆஸ்திரேலியாவை மகுடம் சூட வைத்தார் ரிச்சி பெனோ.

டெஸ்ட் வரலாற்றில் முதன் முதலாக ‘டை’ ஆன பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் விளையாடியவர். மேலும் அதே 1960-61 தொடரில் மே.இ.தீவுகளுக்கு எதிராக சிறப்பாக ஆடியவர் ரிச்சி பெனோ. 1952 முதல் 1964 வரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக சிறப்புற்றவர் ரிச்சி பெனோ.

கிரிக்கெட் வரலாற்றில் அவர் காலக்கட்டத்தில் மட்டுமல்லாது அதன் பிறகும் கூட உலக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு செலுத்தியவர் ரிச்சி பெனோ.

1960-இல் கேப்டனாக இருந்த போதே பிபிசி-க்காக வர்ணனையில் ஈடுபட்டார். அதன் பிறகே உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளராகத் திகழ்ந்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் போட்டிகளின் போது ரிச்சி பெனோ வர்ணனையாற்றியது கிரிக்கெட்டுக்கு பெரும் கவர்ச்சியூட்டியது. 1985-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மினி உலகக்கோப்பையில் கவாஸ்கர் தலைமை இந்தியா வென்றது. அந்தத் தொடரில் இங்கு நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்ட போட்டிகளின் மூலம்தான் ரிச்சி பெனோ என்ற வர்ணனையாளர் இளம் இந்திய ரசிகர்களுக்கு தெரிய வந்தார்.

இவர் அளவுக்கு ஆட்டத்தின் நுணுக்கங்களை வர்ணனையில் கையாண்டவர்கள் வேறு ஒருவர் இல்லை எனலாம். இவர் மூலம் கிரிக்கெட் வீரராகவும் சிறந்த வர்ணனையாளராகவும் வளர்ந்தவர்தான் இயன் சாப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் கவாஸ்கர் தான் வர்ணனையாளராக வேண்டும் என்ற ஆசையே ரிச்சி பெனோவின் வர்ணனையைக் கேட்டுத்தான் ஏற்பட்டது என்/று ஒரு முறை கூறியதும் நினைவு கூரத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர் ஆடத் தொடங்கிய போது சச்சினின் ஆட்டத் திறமைகளை நுணுக்கத்துடன் விவரித்து சச்சின் பேட்டிங் பற்றிய அதிசயங்களை கிரிக்கெட் பண்டிதர்கள் மத்தியில் உருவாக்கியவர் ரிச்சி பெனோ.

சுனில் கவாஸ்கர் விளையாடத் தொடங்கிய காலத்திலிருந்தூ வர்ணனையில் இருக்கும் அவர் மிகச்சுலபமாக பெரிய வீரர்களின் ஆட்டத்தில் உள்ள வித்தியாசமான தனிப்பட்ட சிறப்புகளை நுணுக்கத்துடன் அவதானித்தார்.

இன்றைய ஒருநாள் கிரிக்கெட்டுகளுக்கான முன்னோடியாகத் திகழ்ந்த கெர்ரி பேக்கர் தொடரை கொண்டு வந்ததில் இவரது பங்கு அதிகம். எண்ணற்ற வீரர்களுக்கு ஆதர்சமாக திகழ்ந்த ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர், ஸ்பின் மேதை ரிச்சி பெனோவின் மறைவு கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய இழப்பு என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x