Published : 26 Apr 2015 12:42 PM
Last Updated : 26 Apr 2015 12:42 PM
வரும் ஆகஸ்ட் மாதம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்கு இந்தியாவின் முன்னணி வட்டு எறிதல் வீரரான விகாஸ் கவுடா தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் சான் டீகோ நகரில் உள்ள ஒலிம்பிக் பயிற்சி மையத்தில் நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் கவுடா. உலக தடகளப் போட்டிக்கான தகுதி தூரம் 65 மீ. ஆகும். விகாஸ் கவுடா 65.25 மீ. தூரம் எறிந்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றது குறித்துப் பேசிய விகாஸ் கவுடா, “இரண்டாவது போட்டியிலேயே உலக தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. உலக தடகளப் போட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில்தான் எனது கவனம் உள்ளது.
உலக தடகளப் போட்டிக்கு முன்னதாக உஹானில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப், ஷாங்காய் நகரில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் உள்ளிட்ட 6 போட்டிகளில் பங்கேற்கவிருக்கிறேன். பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள உலக தடகளப் போட்டியில் எனது கனவு பதக்கத்தை வெல்லவேண்டும். பதக்கம் வெல்வது மிகக் கடினம் என்பது எனக்கு தெரியும். எனினும் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT