தொடர்ந்து 4வது சதம்: சங்ககாரா புதிய உலக கோப்பை சாதனை

தொடர்ந்து 4வது சதம்: சங்ககாரா புதிய உலக கோப்பை சாதனை
Updated on
1 min read

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து உலகக் கோப்பையில் புதிய சாதனையை படைத்துள்ளார் இலங்கை வீரர் சங்க்காரா.

ஸ்காட்லாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டி ஹோபர்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி ஸ்காட்லாந்து பந்துவீச்சை எதிர்பார்த்தது போல விளாசித் தள்ளி வருகிறது.

துவக்க வீரர் திரிமன்னே 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, தில்ஷான் - சங்ககாரா ஜோடி எளிதாக ரன் சேர்க்க ஆரம்பித்தது. இதில் தில்ஷான் 97 பந்துகளிலும், சங்கக்காரா 86 பந்துகளிலும் தங்களது சதத்தை எட்டினர்.

வங்கதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசி மூன்று போட்டிகளிலும் சதமடித்திருந்த சங்கக்காரா, ஸ்காட்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சதம் எடுத்து, உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

சதமடித்த அடுத்த ஓவரிலேயே தில்ஷான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஜெயவர்த்தனேவும் 2 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்த பந்திலேயே 124 ரன்கள் எடுத்திருந்த சங்ககாரா கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 95 பந்துகளை சந்தித்த சங்ககாரா அதில் 13 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் எடுத்திருந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in