Last Updated : 31 Mar, 2015 10:10 AM

 

Published : 31 Mar 2015 10:10 AM
Last Updated : 31 Mar 2015 10:10 AM

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: உச்சகட்டம் சொல்லும் பாடங்கள் என்ன?

இந்தியா வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த போது சமூக வலைதளங்களில் சில செய்திகளும் காட்சித் துணுக்குகளும் வெறிபிடித் தாற்போலப் பரவிக்கொண்டி ருந்தன. பாகிஸ்தானை அடுத்துத் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு ஒரு செய்தி பரவியது. “யார் பச்சை சட்ட போட்டாலும் அடிப் போம்”. பாகிஸ்தானைப் போலவே தென்னாப்பிரிக்க அணியினரும் பச்சை நிறச் சீருடை அணிபவர்கள்.

காலிறுதியில் வங்கதேசம் என்றதும் “மறுபடியும் பச்ச சட்டயா?” என சுரேஷ் ரெய்னா எக்காளத்துடன் சிரிக்கும் காட்சித் துணுக்கு பரவியது. பச்சையைக் கண்டால் சீறி அடிக்கும் வீரர்கள் மஞ்சளைக் கண்டதும் பயந்து பம்முவது ஏன் என ரசிகர்கள் இப்போது கேட்கிறார்கள்.

கிரிக்கெட்டைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள்கூட ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதல்ல என்று சொல்லிவிடுவார்கள். கள நிலவரம் அறிந்தவர்களுக்கு இந்தியா அரையிறுதியில் ஆஸ்தி ரேலியாவை வெல்லும் என்ற நம்பிக்கை வந்திருக்காது. இந்தியா இந்தத் தொடரில் நன்றாகவே ஆடியது. குறிப்பாக அதன் பந்து வீச்சு வழக்கமான தவறுகளைத் திருத்திக்கொண்டு கூர்மை பெற்றிருந்தது. முதல் ஆறு மட்டையாளர்களில் ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு போட்டியில் முக்கியப் பங்காற்றினர்.

ஆனால் கறாராகப் பார்த்தால் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு சவால் விடக்கூடிய அணி அல்ல என்பது புரியும். இந்த இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும் இந்தியா காலிறுதிக்கு வந்திருக்கும்.

எல்லாப் போட்டிகளிலும் வென்றதால் முதலிடம் பெற்று, ஒப்பீட்டளவில் பலவீனமான அணியுடன் காலிறு தியில் மோதும் வாய்ப்புக் கிடைத் தது. எனவே இந்தியா புதிய தொரு அணியாக, பெரிய அணி களைப் பெரிய போட்டிகளில் வெல் லக்கூடிய அணியாக உருவாகி விட்டது என்பதைச் சொல்ல இந்த வெற்றிகள் போதாது.

வெற்றிகளின் பலன் என்ன?

ஆனால் தன்னம்பிக்கையைக் கூட்ட இந்த வெற்றிகள் போதும். தன்னம்பிக்கையும் முனைப்பும் உள்ள அணிகள் தங்களது திற மையை முழுமையாக வெளிப் படுத்தி ஆடும். சில சமயம் எல்லை களையும் விரிவுபடுத்தும். ஆனால் அதுதான் அரையிறுதியில் நடக்க வில்லை. தொடர்ந்து ஏழு போட்டி களில் வென்ற அடையாளமே தெரியவில்லை. டாஸில் தோற்றுப் பந்து வீசத் தொடங்கியதுமே இந்தியாவின் தன்னம்பிக்கை காணாமல்போனது.

ஏழு போட்டிகளில் எழுபது விக்கெட்டுகளை எடுத்த பெருமையுடன் சிட்னிக்கு வந்த இந்திய வீச்சாளர்களிடம் அத்தனை விக்கெட்களை எடுத்த தெம்பைக் காண முடியவில்லை. தறிகெட்ட வீச்சாக இல்லை என்றாலும் எந்தத் தொந்தரவையும் தராத வீச்சாகவே அமைந்தது.

ஆஸ்திரேலியாவும் அதிரடி ஆட்டத்தில் இறங்காமல் நிதானமாகவே அணுகியது. பதற்றமில்லாமல் ரன் குவித்தது. கையில் விக்கெட் இருந்ததால் பையில் ஸ்கோர் தானாக வரும் என்பதை உணர்ந்து ஆடியது.

ஆஸ்திரேலியப் பந்து வீச்சின் வலிமையை வைத்துப் பார்க்கும்போது 328 என்பது எந்த அணிக்கும் எந்தக் களத்திலும் சவாலான இலக்குதான். 300, 307 ஆகிய இலக்குகளை வைத்து முறையே பாகிஸ்தான், தென்னாப் பிரிக்காவை இந்தியாவால் மிரட்ட முடியும் என்றால் 328 என்னும் இலக்கை வைத்து ஆஸ்திரேலி யாவால் இந்தியாவை முடக்க முடியாதா?

அண்மைக் காலமாகச் சற்றே தொய்வடைந்திருந்த மிட்செல் ஜான்சன் இந்தப் போட்டியில் மீண்டும் தன் ஆட்டத் திறனைப் பெற்றுவிட்டார். மிட்செல் ஸ்டார்க்கின் வீச்சில் நிஜமாகவே பொறி பறந்தது. இவர்களுக்குத் துணையாக ஹேஸில்வுட்டும் ஜேம்ஸ் ஃபாக்னரும் கூர்மையாகப் பந்துவீச, இந்தியா மிரண்டது.

கோலி செய்த தவறு

இந்தியா தோற்றதில் தவறில்லை. ஆனால் தோற்ற விதம்தான் தவறு. இந்தியப் பந்து வீச்சு 300 ரன்களுக்கு மேல் கசியவிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய மட்டையாளர்கள் போராடாமல் வீழ்ந்ததுதான் அவமானம். அதிருஷ்ட வாய்ப்புகளால் தப்பிப் பிழைத்த ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவனும் இன்னும் சிறிது பொறுப்புணர்வுடன் ஆடியிருக்கலாம். விக்கெட்டைக் காப்பாற்றிக்கொண்டால் பிறகு அடித்து ஆடலாம் என்பதால் விராட் கோலி அவசரப்பட்டு புல் ஷாட் அடிக்காமல் இருந்திருக்கலாம்.

அயல் நாடுகளில் சிறப்பாக ஆடிவரும் அஜிங்க்ய ரஹானே மேலும் தன்னம்பிக்கையுடன் ஆடியிருக்கலாம். இந்த நால்வரும் இந்தத் தொடரில் அவ்வப்போது பிரகாசித்தார்களே தவிர யாருமே சீராக ஆடவில்லை. அயல் மண்ணில் வலுவான அணிகளுக்கு எதிராகப் பெரிய போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் அதிகம் எடுபட்டதில்லை. இந்தப் போட்டியும் அவரது போதாமையைக் காட்டிவிட்டது. மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்தான். ஆனால் தொடக்கமே இல்லாத போது எங்கிருந்து முடிப்பது?

ஜடேஜா தேவையா?

ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மட்டையாலோ பந்தினாலோ சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பங்களிப்பும் செலுத்தவில்லை. அவரைத் தேர்வுசெய்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பிவிட்டார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததால் இந்தக் குறை தெரியவில்லை. முக்கியமான போட்டியன்று எல்லாக் குறைகளும் அம்பலமாயின. இந்தியா பெரிய அணிக்கெதிரான பெரிய போட்டிக்குத் தயாராக இல்லை என்னும் கசப்பான உண்மை வெளிப்பட்டது.

ஆஸி அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் ஆட்டமிழந்தது தவறான ஷாட்டினால்தான். ஆனால் அவரது அணியினர் அந்தத் தவறை மறக்கச் செய்தார்கள். அதிரடி மேக்ஸ்வெல் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆனால் ஜான்சன் வந்து 9 பந்துகளில் 27 ரன் எடுத்தார். ஒவ்வொருவரும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் போராடினர்.

இந்திய மட்டையாளர்கள் ஆடிய விதத்தை இதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். திறமையைக் காட்டிலும் பெரிய பிரச்சினை தீவிர முனைப்பின்மை என்பது புரியவரும். 328 ரன்களை எடுக்க முடியாமல்போயிருக்கலாம். ஆனால் தீரமாகப் போராடி 250 ரன்களையாவது கடந்திருக்கலாம். கடைசிவரை போராடும் முனைப்பு இல்லாமல்போனதுதான் அவலம்.

நியூஸிலாந்தின் அதிர்ச்சி

இந்தியாவாவது ரன் மழை பொழியும் ஆடுகளத்தில் முதலில் மட்டையாடும் வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் அதைக் கோட்டை விட்டது. மட்டை வீச்சைத் தேர்ந் தெடுத்த பிரென்டன் மெக்கல்லம் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் ஸ்டார்க்கின் பந்துக்குப் பலியா னார். வெற்றிகரமான இன்னொரு மட்டையாளரான மார்ட்டின் கப்டில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இன்னொரு நல்ல மட்டையாளரான கேன் வில்லியம்ஸனும் விரைவில் ஆட்டமிழந்தார்.

39-3. இந்த அதிர்ச்சியிலிருந்து நியூஸிலாந்து மீளவே இல்லை. ராஸ் டெய்லரும் கிராண்ட் எலியட்டும் நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்தாலும் அதில் வேகமோ ஆதிக்கமோ இல்லை. ஸ்கோர் 150ஆக இருந்தபோது டெய்லர் வீழ்ந்தார். அதன் பிறகு 183 ரன்னுக்குள் 10 விக்கெட்களும் வீழ்ந்தன. இறுதிப் போட்டியில் போட்டியே அற்ற நிலை உருவானது.

அதீத தன்னம்பிக்கை எதுவும் இல்லாமல் ஆஸ்திரேலியா கவனமாகவே ஆடி வென்றது. முதல் சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்றதற்குப் பழிதீர்க்கப்பட்டது. ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற கிளார்க் தன் கடைசிப் போட்டியை மறக்க முடியாததாக ஆக்கிக்கொண்டார்.

ஆஸியின் அற்புத ஆட்டம்

ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றது. உயிருள்ள உடலில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் கத்தியைச் செலுத்துவதுபோன்ற தேர்ச்சியும் லாகவமும் கொண்ட ஆட்டம் அது. இதற்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் எதிரணி தன் மொத்தத் திறமையையும் காட்ட வேண்டும். ஒருவரேனும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

இவை இரண்டுமே அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நடக்கவில்லை. விளைவு, நியூஸிலாந்து முதல் முறையாக இறுதிப் போட்டிவரை வந்த திருப்தியுடன் வீடு திரும்பியிருக்கிறது. இந்தியாவோ கோப்பையைப் பணிவுடன் திருப்பிக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறது.

இந்தியா அரை இறுதிக்கு வரும் என்று பிப்ரவரி 14-ம் தேதிக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள். அந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு வந்ததே பெரிய விஷயம். தொடர் வெற்றிகள் தந்த நம்பிக்கை இந்தியாவின் குறைகளை மறக்கச் செய்துவிட்டது. மறந்துபோன விஷயங்களெல்லாம் மறைந்து போன விஷயங்களாகிவிடாது. குறைகளை மறையச் செய்ய வேண்டுமென்றால் தீவிரமாக உழைக்க வேண்டும்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x