Published : 05 Mar 2015 09:58 AM
Last Updated : 05 Mar 2015 09:58 AM
பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மகேஸ்வரன் அங்கே தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பது குறித்து 2 வாரத்துக்குள் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த பிரசாந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: எனது கணவர் மகேஸ்வரன் இலங்கைக்கு எதிராக செயல்பட திட்டமிடுவதாகக் கூறி அவரை கைது செய்து, பூந்தமல்லி அகதிகள் முகாமில் அடைத்தனர். 100 நாட்களுக்கும் மேலாக முகாமில் வாடும் அவரை விடுவிக்கக் கோரி நான் தொடர்ந்த வழக்கில் அவரை விடுவித்தும், இலங்கைக்கு திரும்பிச் செல்வது தொடர்பாகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கைக்கு சென்றால் அவருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் இவ்வழக்கை விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மகேஸ்வரன் இலங்கைக்கு சென்றால் அவருக்கு பாதுகாப்பு இல்லை என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, கடந்த டிசம்பர் மாதம் நான் பிறப்பித்த உத்தரவில் மாற்றம் செய்கிறேன். அந்த உத்தரவில் இலங்கை போவதற்கு மகேஸ்வரன் விரும்புகிறார் என்ற பகுதியை நீக்கிவிட்டு, அவர் அகதிகள் முகாமிலே இருக்க வேண்டுமா, இல்லையா என்பது பற்றி கருணை அடிப்படையில் இரண்டு வாரங்களுக்குள் பரிசீலித்து உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி வி.ராம சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT