

இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த விராட் கோலி, பத்திரிகையாளர் ஒருவரை வசை பாடியுள்ளார். பெர்த் மைதானத்தில் பயிற்சியை முடித்து விட்டு திரும்பும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.
இன்றைய பயிற்சி முடிந்து அறைக்கு திரும்பும் போது, தன் முன் வந்த பத்திரிகையாளர் ஒருவரை கோலி திடீரென வசை பாட ஆரம்பித்தார். நிறுத்தாமல் சிறிது நேரம் திட்டித் தீர்த்த கோலி, கோபமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். இந்திய அணியினர் எவரும் இதை எதிர்பார்க்காததால் என்ன நடந்ததெனப் புரியாமல் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கும் ஏன் கோலி திட்டினார் எனத் தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து ஆசுவாசம் அடைந்த கோலி, அனுஷ்கா ஷர்மாவையும் தன்னையும் இணைத்து தேசிய நாளிதழ் ஒன்றில் செய்தி பிரசுரமாகியுள்ளது. அதை எழுதியவர் அந்த பத்திரிகையாளர் என நினைத்ததால் திட்டினேன் என்று கூறியுள்ளார்.
ஆனால் கோலி திட்டியது, அந்தச் செய்தியை எழுதிய பத்திரிகையாளரை அல்ல, வேறொருவரை தவறுதலாக திட்டி விட்டார். இது தெரியவந்தவுடன், மற்றொரு பத்திரிகையாளர் மூலமாக கோலி மன்னிப்புக் கோரியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரி, கோலியை அழைத்து, பொது இடத்தில் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிர்காலத்தில், கோலி அணியின் கேப்டனாக உருவாவதை இத்தகைய செயல்கள் பாதிக்கும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.