Last Updated : 16 Mar, 2015 04:56 PM

 

Published : 16 Mar 2015 04:56 PM
Last Updated : 16 Mar 2015 04:56 PM

புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் எதிரொலி: கண்ணன் எம்.பி. மீது வழக்குப் பதிவு

ஆக்கிரமிப்பு அகற்றும் போது ஏற்பட்ட மோதல் தொடர்பாக எம்பி கண்ணனை கைது செய்யக்கோரி புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் எம்.பி.கண்ணன் மீது 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இரவு கம்பன் கலையரங்கம், புஸ்ஸி வீதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதை அறிந்த புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் கண்ணன் நள்ளிரவில் தனது ஆதரவாளர்களுடன் சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம் வெளியே கம்பன் கலையரங்கு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறும்போது, "கண்ணன் எம்.பி, அவரது ஆதரவாளர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; நகராட்சி ஆணையர், ஊழியர்களுக்கு கடமையைச் செய்யும் வகையில் பாதுகாப்பு வழங்க வேண்டும். நகராட்சி அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

கம்பன் கலையரங்கம் அருகே ஆணையர் அலுவலகப் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதே போல் நகராட்சி அதிகாரிகளையும், ஊழியர்களையும் தாக்கி மிரட்டல் விடுத்த கண்ணன் எம்.பி. ஆதரவாளர்கள் மீது போலீஸார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வடக்கு எஸ்.பி. அலுவலகத்தை திராவிடர் விடுதலைக் கழகத்தினர் முற்றுகையிட்டனர்.

மாநில தலைவர் லோகு. அய்யப்பன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தந்தை பிரியன், விஜயசங்கர், சிவானந்தம், பார்த்திபன், தீனதயாளன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இப்போராட்டத்தை முன்னிட்டு வடக்கு எஸ்.பி. அலுவலகம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஒதியஞ்சாலை போலீஸார் எம்பி கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் கேட்டதற்கு, ஐபிசி 353 (அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல்), 294 (தகாத வார்த்தையால் திட்டுதல்), 506(1) (கொலைமிரட்டல்), 34 (பொது சொத்தை சேதப்படுத்துதல்) ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று குறிப்பிட்டனர்.

எக்கட்சி: புதுச்சேரி எம்பியான கண்ணன் காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் நாராயணசாமி போட்டியிட்ட போது இவர் வாக்கு சேகரிக்கவில்லை. இதுதொடர்பாக மேலிடத்தில் கட்சியினர் புகார் தெரிவித்தனர். கட்சி செயல்பாடுகளில் விலகி உள்ளார். தற்போது இவரது ஆதரவாளர்கள் தனி அமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். அதற்காக அலுவலகத்துக்கு தனது மனைவியின் இடத்தை எம்பி கண்ணன் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x