கோலாகலமாக தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட்

கோலாகலமாக தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட்
Updated on
1 min read

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கோலாகல கொண்டாட்டங்களுடன் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் சார்பில் அந்தந்த நாட்டு கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. இந்தியா சார்பில் மூவர்ணக் கொடி பின்னணியில் இந்திப் பாடல்களுக்கு நடனம் ஆடினர். இலங்கை சார்பில் அந்நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வங்கதேச குழுவினர், அந்நாட்டு கிரிக்கெட் அணியின் சீருடையுடன் நடன மாடினர். பின்னணியில் வங்கதேச கொடி பறக்கவிடப்பட்டது. பாகிஸ்தான் தரப்பில் பாடகர் இருவர் பாடினர். சிறுவர் சிறுமிகள் தேசியக் கொடியுடன் நடனமாடினர். தென்னாப்பிரிக்க சார்பில் பழங்குடியினரின் பாரம்பரிய மேளதாளம் இசைக்கப்பட்டு நடனமாடினர்.

இந்த நடனத்துக்கு அரங்கத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஸ்காட்லாந்து சார்பில் இசைக்குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தினர். நியூஸிலாந்து சார்பில் அந்நாட்டின் பாரம்பரிய மவுரி நடனம் நடத்தப்பட்டது. இதுவும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தினர் கலீஜி நடனம் ஆடப்பட்டது. ஆஸ்திரேலிய குழுவினர் பாப் பாடல் பாடினர். மேற்கிந்தியத் தீவுகள் சார்பில் டிரம்ஸ் இசைக்கப்பட்டது.

இறுதியில் வாணவேடிக்கைகள் நடத்தப்பட்டன. அரங்கில், 2015-ம் ஆண்டு உலகக்கோப்பை லோகோ போன்று கிரிக்கெட் வீரர் சின்னம் பொம்மலாட்டமாக நடத்தி வரப்பட்டது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in