Last Updated : 05 Feb, 2015 10:05 AM

 

Published : 05 Feb 2015 10:05 AM
Last Updated : 05 Feb 2015 10:05 AM

உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக சச்சின் இல்லாமல் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்தியா

உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வீழ்த்தி வந்துள்ளது அனைவருக்கும் தெரிந்த வரலாறு. இந்தியாவின் அந்த வெற்றிகளில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் டெண்டுல்கரின் சிறப்பான ஆட்டமும் முக்கிய காரணமாக இருந்தது.

உலகக் கோப்பை போட்டிகள் பலவற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் தொடக்க வீரராக களமிறங்கி அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே வெற்றிக்கு வித்திட்டது.

1992-ம் ஆண்டு முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போட்டியில் சச்சின் எடுத்த 54 ரன்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அப்போது தொடங்கி இப்போது வரை உலகக் கோப்பையில் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொண்டபோதெல்லாம் சச்சின் களமிறங்கி வந்தார்.

ஆனால் இந்த உலகக் கோப்பையில் முதல்முறை சச்சின் இல்லாமல் பாகிஸ்தானை இந்தியா எதிர்கொள்கிறது. ஏற்கெனவே மிகுந்த பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி, இப்போது சச்சின் இல்லாமல் நடப்பதால் கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பிப்ரவரி 15-ம் தேதி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.

1992-ம் ஆண்டுக்குப் பிறகு 1996 (காலிறுதி), 1999 (சூப்பர் சிக்ஸ் சுற்று), 2003 (லீக் சுற்று) 2011 (அரையிறுதி) என மொத்தம் 5 முறை உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தானை இந்தியா வென்றுள்ளது.

2011-ம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக சச்சின் 85 ரன்கள் எடுத்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x