Published : 17 Feb 2015 10:46 AM
Last Updated : 17 Feb 2015 10:46 AM
வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றமான வர்த்தகத்தை கண்டன. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ் 40 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்துள் ளது. தேசியப் பங்கு சந்தையான நிப்டி 3 புள்ளிகள் ஏற்றத்தில் முடிந்துள்ளது. தொடர்ந்து 5 வர்த்தக நாட்களாக இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையின் முன்னணி 30 பங்குகள் ஏற்றமான வர்த்தகம் கண்டது. நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 29318 புள்ளிகள் வரை உச்சம் கண்டது. தொடர்ந்து ஏற்றத்திலேயே நடந்த வர்த்தகம், சந்தை முடியும் நேரத்துக்கு முன்பாக 29087 புள்ளிகள்வரை கீழே இறங்கி மீண்டும் ஏற்றம் கண்டு 29135 புள்ளிகளில் நிலை கொண்டது.
நேற்றைய வர்த்தகத்தில் எப்எம்சிஜி துறை பங்குகள் 1.79 % ஏற்றமான வர்த்தகம் கண்டன. மேலும் ரியாலிட்டி மற்றும் கட்டமைப்பு துறை பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. வங்கித்துறை பங்குகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, ஹெல்த்கேர் துறை பங்குகள் சரிவைக் கண்டன.
ஐடிசி 3.06%, என்எம்டிசி 2.56%, டிசிஎஸ் 1.81%, பார்தி ஏர்டெல் 1.79%, ஹிந்துஸ்தான் யுனிலீவர் 1.59% அளவுக்கு ஏற்றம் பெற்றன. சன் பார்மா -2.74%, ஆக்ஸிஸ் வங்கி -1.86%, ஐசிஐசிஐ வங்கி -1.69%, ஹிண்டால்கோ -1.69%, ஹீரோ மோட்டோ கார்ப் -1.68% அளவுக்கு சரிவைச் சந்தித்தன.
இம்மாத இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் சில்லரை முதலீட்டாளர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மத்திய பட்ஜெட்டில் வளர்ச்சி சார்ந்த திட்டங்கள், சீரமைப்புகள் தொடர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். மேலும் அந்நிய முதலீடு சீராக உள்ளதும் சந்தை ஏற்றத்திற்கு காரணம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெல்லி தேர்தலுக்கு பிறகு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பேசிவருவதும் முக்கியமானது. இதன் மூலம் வருகிற பட்ஜெட் முதலீட்டாளர்களுக்கு சாதக மானதாக இருக்கும் என்றே கூறுகின்றனர். குறைவான பணவீக்க விகிதமும் லாபம் மற்றும் வருமானம் அதிகரிப்புக்குக் காரணமாக இருக்கிறது.
சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் சாதகமான சூழ்நிலையும் இந்திய சந்தைகளில் ஏற்றத்திற்கு காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய வர்த்தகத்தில் 1377 பங்குகள் ஏற்றத்தையும், 1251 பங்குகள் இறக்கத்தையும் சந்தித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT