Published : 13 Feb 2015 10:43 AM
Last Updated : 13 Feb 2015 10:43 AM

உலகக் கோப்பை: செய்திச் சாரல்

ட்விட்டரில் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கள் 15 பேருக்கும் தனித்தனியாக ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு ரசிகரல்லாதவர் யார் என ஜடேஜாவுக்கும், எல்லா போட்டிகளிலும் ஸ்விங் செய்யுங்கள் என புவனேஷ்வர் குமாருக்கும், உங்களது சுழல், பேட்ஸ்மேன்களுக்கு ஆச்சரியத்தையும், நமக்கு வெற்றியையும் அளிக்கும் என அஸ்வினுக்கும் தனித்தனியே வாழ்த்துகளை அனுப்பியுள்ளார் மோடி.

மிரட்டும் மட்டையாளர்கள்

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல், டேவிட் ஆகியோர் ஆதிக்கம் செலுத்துவர்.

இந்த மூன்று வீரர்களும் நிகழ்த்தும் வாணவேடிக்கை பார்வையாளர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தும். எந்தவொரு பந்துவீச்சாளரும் இந்த மூவரைப் பார்த்து நடுங்குவர். இவர்களை ரன் எடுக்காமல் கட்டுப்படுத்துவதை விட, ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்தது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளது.

ஹாட் ஸ்பாட் இல்லை

ஐசிசி சிஇஓ டேவ் ரிச்சர்ட்ஸன் கூறியதாவது: முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையின் ஒருபகுதியாக ஹாட் ஸ்பாட் முறை பின்பற்றப்படமாட்டாது. இம்முடிவில் மாற்றமில்லை. இம்முறையைப் பயன்படுத்தும் போது சில நேரங்களில் குழப்பம் ஏற்படுகிறது. ஸ்னிக்கோ (ஆர்டிஎஸ்) முறையே பின்பற்றப்படும்.

மேம்படுத்தப்பட்ட இணையதளம்

உலகக் கோப்பைத் தொடரை முன்னிட்டு, தனது இணையதள பக்கத்தை மேம்படுத்தப்பட்ட வகையில் வடிவமைத்துள்ளது ஐசிசி. இணையதள தொடர்புடன் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அதிவிரைவாக ஸ்கோர்களை நேரடியாகப் பெற முடியும். மேலும் பல்வேறு புள்ளிவிவரங்களையும் அந்தந்த நொடிகளிலேயே பெறவும், பழைய தகவல்களைப் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. இது ‘ஆப்’ வடிவிலும் வெளியிடப்பட்டுள்ளது.

கிளார்க் இல்லை

உலகக்கோப்பையின் முதல்போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் கிளார்க் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குகிறார்.

பயிற்சிப் போட்டி ஒரு பொருட்டல்ல

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வக்கார் யூனுஸ் கூறியதாவது: வங்கதேசம், இங்கிலாந்துக்கு எதிரான இரு பயிற்சிப் போட்டிகளிலும் பாகிஸ்தான் வென்றுள்ளது. அதை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. இருப்பினும், அந்த போட்டியில் பெற்ற வெற்றி மனோநிலையிலிருந்து அணியினர் விலகிச் சென்றுவிடக்கூடாது.

அப்போட்டிகளில் பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்டதை சாதகமாக எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x