Published : 10 Feb 2015 10:12 AM
Last Updated : 10 Feb 2015 10:12 AM

கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது: 8.70 கிலோ தங்கம் பறிமுதல்

கோவையில் நகைப்பட்டறை ஊழியரை அரிவாளால் வெட்டி 7.25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து 8.70 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

கோவை, தடாகம் சாலை, பொன்னையராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் சீனிவாசன் (40). இவர்கள் இருவரும் தங்க நகைப்பட்டறை வைத்துள்ளனர். இவர்களிடம், பொன்னையராஜபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (38), பிரகாஷ் (30) ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ரூ.2 கோடி மதிப்பில் சென்னையில் இருந்து தங்கக் கட்டிகள் வாங்கி வருமாறு ஊழியர்களான விஜயகுமார், பிரகாஷை தங்கப்பட்டறை உரிமையாளர் வெங்கடேசன் அனுப்பி வைத்தார். அவர்கள் 7.25 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கடந்த 31-ம் தேதி மாலை கோவை திரும்பினர். அவர்கள் இருவரையும் வெங்கடேசன் அழைத்துக் கொண்டு பொன்னையாராஜபுரத்தில் உள்ள நண்பரும், நகைப்பட்டறை வைத்திருப்பவருமான சீனிவாசன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சீனிவாசன் வீட்டுக்கு எதிரே வழிமறித்த ஒரு கும்பல், இரு பைகளில் வைக்கப்பட்டிருந்த மொத்த தங்கத்தையும் பறித்துவிட்டு தப்பியது.

இது குறித்து வெரைட்டிஹால் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணை நடத்தி, கேரளத்தை சேர்ந்த 5 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

முதலாவது எதிரி, திருச்சூரை சேர்ந்த சிவக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில், அவரை கர்நாடக மாநிலம் மைசூரில் நேற்று கைது செய்தனர். ஏற்கெனவே, பல்வேறு கொள்ளைகளில் அவர் ஈடுபட்டுள்ளது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதேபோன்று கொள்ளையில் சேர்த்த மேலும் ஒரு கிலோ தங்கத்தையும் கூடுதலாக அவரிடமிருந்து போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன்படி, கொள்ளையடித்து வைத்திருந்த 8.70 கிலோ தங்கம், ரூ. 35 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x