

ஜெர்மனியில் நடைபெற்ற ஸ்டட்கார்ட் கிராண்ட் பிரிக்ஸ் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். இப்போட்டியில் தொடர்ந்து 3-வது ஆண்டாக வெற்றி பெற்று அவர் சாதனை படைத்துள்ளார்.
இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் அனா இவானோவிச்சை ஷரபோவா எதிர்கொண்டார். முதல் செட்டை 3-6 என்ற கணக்கில் இவானோவிச் வென்றார். இதையடுத்து ஆக்ரோஷமாக விளையாடிய ஷரபோவா 6-4,6-1 என்ற கணக்கில் அடுத்த இரு செட்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்த ஆண்டில் ஷரபோவா வென்றுள்ள முதல் பட்டம் இது. ஒட்டுமொத்தமாக அவர் வென்றுள்ள 30-வது பட்டம் இது. ஸ்டட்கார்டில் நடைபெறும் போட்டியில் தொடர்ந்து 13-வது வெற்றியை அவர் பெற்றுள்ளார்.
தோள்ப்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷரபோவா கடந்த ஆண்டில் 4 மாதமாக விளையாடாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சானியா ஜோடி தோல்வி
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வியடைந்தது.
இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சாரா எர்ரானி ராபர்டா வின்ஸி ஜோடி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் சானியா ஜோடியை வீழ்த்தியது. சானியா ஜோடி இந்த ஆட்டத்தில் வென்று இருந்தால் இந்த ஆண்டின் முதல் பட்டமாக அமைந்திருக்கும். இதற்கு முன்பு இண்டியன் வேல்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்திலும் சானியா ஜோடி தோல்வியடைந்தது.