Published : 21 Feb 2015 11:29 AM
Last Updated : 21 Feb 2015 11:29 AM

”சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிப்பது அவசியம்

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படித்து, பொது அறிவை வளர்த்துக்கொள்வது அவசியம் என அரசின் முதன்மைச் செயலர் வெ.இறையன்பு தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில், ஐஏஎஸ் அகாதெமி தொடக்கவிழா நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் சரவணசங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் வாசுதேவன் வரவேற்றார். தமிழக அரசின் முதன்மைச் செயலர் வெ. இறையன்பு கலந்துகொண்டு, ஐஏஎஸ் அகாதெமியை தொடங்கி வைத்து பேசியது:

இப்பல்கலைக்கழக மாணவர்கள் மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, அகில இந்திய பணிகளில் பணியாற்ற வேண்டும். நான் ஐஏஎஸ் தோ்வு எழுதும்போது வழிகாட்ட யாரும் இல்லை. ஆனால், இன்று பலர் உள்ளனர். எந்தவொரு செயலிலும் வெற்றி பெற வழகாட்டுதல் அவசியம்.

பட்டப் படிப்புகளை முடித்தவர்களும், இத்தோ்வில் பங்கேற்கலாம். 21 வயது ஆகியிருக்க வேண்டும். கலைப்பிரிவு மாணவர்கள், தற்போது இந்திய வனத்துறை பணிக்கு மட்டும் செல்ல முடியாது. பட்டப் படிப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் இதற்கு பயன்படாது. மத்திய தோ்வாணையம் நடத்தும் முதல் நிலைத்தோ்வு, மெயின் தோ்வு, நோ்முகத் தோ்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண்களே உங்கள் தரத்தை நிர்ணயிக்கும்.

போட்டித் தேர்வில் ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட, பெரிய பதவிகள் மாறிப்போகும். தொலைதூரக் கல்வியில் பட்டம் பெற்றவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு நீங்கள் எழுதும் பதில்கள், அதனை நியாயப்படுத்தும் வகையில் எழுத வேண்டும். மத்திய அரசின் அயல்நாட்டுக் கொள்கை என்ன என்பதை, அவ்வப்போது நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

வளர்ச்சிபெற்ற நாடாக இந்தியாவை மாற்ற உங்களால் முடியும். உங்கள் ஆற்றலை எல்லாம் குவித்து அறிவை வளர்க்க வேண்டும். இந்தியா எழுச்சிபெற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருந்தால் வலிமையான, எழுச்சிமிக்க பாரதமாக மாறும். இவ்வாறு அவர் பேசினார்.

பேராசிரியை யுவனராணி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x