Last Updated : 11 Feb, 2015 09:38 AM

 

Published : 11 Feb 2015 09:38 AM
Last Updated : 11 Feb 2015 09:38 AM

2011: கனவு மெய்ப்பட்டது; கோப்பை வசப்பட்டது

கிட்டத்தட்ட 30 ஆண்டு காலக் கனவு பலித்த தருணம் அது. 1983-ல் கபில் தேவின் சிங்கங்கள் கோப்பையை வென்று வந்ததிலிருந்தே இந்தியாவின் மீதான எதிர்பார்ப்பு கணிசமாகக் கூடிவிட்டது. 1983-க்குப் பிறகு நடந்த ஒவ்வொரு போட்டியிலும் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது 2011-ல்தான் பலித்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் மகேந்திர சிங் தோனி அடித்த அந்த சிக்சர் கோப்பையை இந்தியாவின் வசமாக்கியது என்றாலும் அதற்கு வந்த பாதை கடினமானது. 2007-ல் உலகக் கோப்பைப் போட்டிக்கான அணியில் இடம்பெற்றிருந்த ராகுல் திராவிட், சவுரவ் கங்கூலி ஆகிய மூத்த வீரர்கள் 2011-ல் அணியில் இல்லை. சச்சின் டெண்டுல்கர் இருந்தார். அனைத்து அணிகளிலும் அதிக அனுபவம் பெற்ற ஆட்டக்காரர் அவர்.

யுவராஜ் சிங், அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், நம்பகமான மட்டையாளர் கவும் காம்பீர், இந்திய மண்ணில் சீராக ஆடிவந்த சுரேஷ் ரெய்னா, இளம் நட்சத்திரம் விராட் கோலி ஆகியோருடன் தோனியின் மட்டை வீச்சும் சேர்ந்து இந்தியாவைச் சிறந்த மட்டை வலு கொண்ட அணிகளுள் ஒன்றாக அடையாளம் காட்டின. ஜாகீர் கான், ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரைக் கொண்ட பந்து வீச்சும் துணைக்கண்டத்து ஆடுகளங்களில் வலுவானதாகவே விளங்கியது.

கரடுமுரடான பாதை

வலுவான அணி, மகத்தான உறுதி, அனுபவும் இளமையும் இணைந்த கலவை, நன்கு பழகிய சூழல் ஆகிய சாதகங்கள் இருந்தும் இந்தியா தட்டுத் தடுமாறித்தான் முன்னேறியது. வலுவான அணிகளுக்கு எதிராக அதன் பந்து வீச்சு எடுபடாமல்போனதுதான் அதற்கு முக்கியக் காரணம்.

முதல் போட்டி வங்கதேசத்துடன். 2007 போட்டியில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறுவதற்குக் கரணமான அணி. எனவே இந்தியா சற்று ஆவேசமாகவே ஆடியது. வீரேந்திர சேவாக் 140 பந்துகளில் 175 ரன் எடுத்தார். விராட் கோலி 83 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். 4 விக்கெட் இழப்புக்கு 370.

அடுத்து ஆடிய வங்கதேசம் 9 விகேட்களை இழந்து 283 ரன் எடுத்துத் தோற்றது. 87 ரன் வித்தியாசத்தில் வெற்றி என்பது நல்ல வெற்றியாகத் தோன்றலாம். ஆனால் வங்கதேசம் போன்ற அணியே இந்தியப் பந்து வீச்சிலிருந்து இந்த அளவு ரன் கறந்தது என்றால் மற்ற அணிகளிடம் இந்தப் பந்து வீச்சு எப்படி எடுபடும் என்னும் நியாயமான கவலை எழுந்தது.

இங்கிலாந்துடனான போட்டியிலும் இந்தியாவின் மட்டை பிரகாசித்தது. சச்சின் 120 (115 பந்துகள்) அடிக்க, காம்பீரும் யுவராஜும் ஆளுக்கொரு அரை சதம் அடிக்க, 338 ரன்களை எட்டியது. இங்கிலாந்தின் இன்னிங்ஸில் 111-2 என்னும் நிலையில் தொடக்க ஆட்டக்காரர் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ், இயன் பெல் ஜோடியின் அருமையான ஆட்டத்தால் 42-வது ஓவரின் முடிவில் 280-2 என்னும் வலுவான நிலையில் இருந்தது.

43-வது ஓவரில் ஜாகீர் கான் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை எடுக்க, ஆட்டம் திசை மாறியது. என்றாலும் இங்கிலாந்து கடுமையாகப் போராடி ஆட்டத்தை ‘டை’ செய்தது.

அடுத்து அயர்லாந்தை எளிதாகச் சுருட்டிவிட்டுத் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இந்தியாவின் மட்டை மீண்டும் எழுச்சியுற்றது. சச்சின் மீண்டும் சதம் அடித்தார் (101 பந்துகளில் 111). சேவாகும் காம்பீரும் அரை சதங்கள் அடித்தார்கள். ஆனால் தென்னாப்பிரிக் காவின் மட்டையாளர்கள் கடைசி ஓவரில் போட்டியை வென்றார்கள்.

அடுத்து மேற்கிந்தியத் தீவுகளை இந்தியா தோற்கடித்தது. இதில் யுவராஜ் சதம் (113) அடித்தார். கோலி அரை சதம் (59) அடித்தார். இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பந்து வீச்சும் எடுபட்டது. 188 ரன்களுக்குள் மே.இ. அணி சுருண்டது. ஜாகீர் கான் 3, அஸ்வின் 2, யுவராஜ் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

மூன்று வெற்றிகள், ஒரு டை, ஒரு தோல்வியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்தியா அதன் பிறகு சுதாரித்துக்கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். கால் இறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. டாஸை வென்று முதலில் மட்டை பிடித்த ஆஸ்திரேலியாவை 260 ரன்களுக்கு இந்தியா மட்டுப்படுத்தியது. சச்சினைப் போலவே ஆஸி அணித் தலைவர் ரிக்கி பான்டிங்குக்கும் அதுதான் கடைசி உலகக் கோப்பை.

இதில் வென்றால் அவரது விடைபெறல் மிகவும் பெருமிதத்துக்குரியதாக இருக்கும். 2003, 2007 கோப்பைகளை வென்ற அணிக்கும் அவர்தான் தலைவர் என்பதால் இது அவருக்கு ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும். பிற மட்டையாளர்கள் சோபிக்கத் தவறினாலும் அவர் விடாப்பிடியாகக் களத்தில் நின்றார். 118 பந்துகளில் 104 ரன் அடித்து அணியின் ஸ்கோர் 260ஐ எட்ட உதவினார்.

இந்தியா பதற்றமில்லாமல் இலக்கைத் துரத்தியது. சேவாக் 15 ரன்னுக்கு ஆட்ட மிழந்தாலும் சச்சினும் காம்பீரும் ஸ்திரப் படுத்தினார்கள். இருவரும் ஆளுக்கொரு அரை சதம் அடித்தார்கள். கோலியும் யுவராஜும் அதை முன்னெடுத்துச் சென் றனர். கோலி (24)யும் தோனியும் (7) ஆட்ட மிழக்க, யுவராஜும் (57) ரெய்னாவும் (34) ஆட்டமிழக்காமல் அணியை அரை இறுதிக்கு அழைத்துச் சென்றார்கள், பான்டிங் சதத்தோடு திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

அரை இறுதியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா டாஸை வென்று முதலில் மட்டை பிடித்தது. ஸ்கோர் 48ஆக இருக்கும்போது சேவாக் (38) ஆட்டமிழந்தார். காம்பீர் சிறிது நேரம் தாக்குப்பிடித்தார் (27). அவருக்குப் பிறகு கோலியும் யுவராஜும் அடுத்தடுத்து வீழ, பதற்றம் தொற்றிக்கொண்டது. என்றாலும் சச்சின் (85), தோனி (25), ரெய்னா (36) ஆகியோரின் உதவியுடன் இந்தியா 260 ரன்களை எட்டியது.

முக்கியமான இந்தப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சு வீறுகொண்டு எழுந்தது. 231 ரன்களுக்குள் பாகிஸ்தான் அணி ஆட்டமிழந்தது. இந்தியா மூன்றாவது முறையாக இறுதிப் போட்டியை எட்டியது.

இறுதி இலக்கு

இலங்கையும் தனது மூன்றாவது இறுதிப் போட்டியை ஆடத் தயாராக இருந்தது. பாகிஸ்தானைத் தவிர வேறு எந்த அணியிடமும் தோற்காத இலங்கை தன்னம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொண்டது. சச்சினின் கடைசி உலகக் கோப்பைப் போட்டி அது. போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. சச்சின் சிறுவனாகப் பந்து பொறுக்கிப் போட்ட மைதானம் அது.

டாஸ் வென்ற இலங்கை மட்டையாட்டத்தைத் தேர்வுசெய்தது. அணித் தலைவர் குமார சங்கக்காராவும் (48) மஹீலா ஜெயவர்த்தனேயும் (103) கௌரவமான ஸ்கோரை (274-6) எட்ட உதவினார்கள். முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் சேவாக் ஆட்டமிழந்தார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த சச்சின் ஸ்கோர் 31 ஆக இருக்கும்போது ஆட்டமிழந்தார் (18). அரங்கம் அமைதியில் உறைந்தது.

காம்பீரும் கோலியும் பதறாமல் இன்னிங்ஸை முன்னெடுத்துச் சென்றனர். ஸ்கோர் 114ஆக இருக்கும்போது கோலி வீழ்ந்தார். இன்னும் 29.2 ஓவர்களில் 161 ரன் எடுக்க வேண்டும். நல்ல ஃபார்மில் இருக்கும் யுவராஜும் ரெய்னாவும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் தோனி யாரும் எதிர்பாராத ஒரு காரியத்தைச் செய்தார். கால் காப்பைக் கட்டிக்கொண்டு மட்டையுடன் களம் இறங்கினார். அனைவரும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்தார்கள்.

“அது ஒரு சூதாட்டம் என்பது எனக்குத் தெரியும்” என்று பின்னாளில் தோனி கூறினார். யுவராஜ் சிங் நல்ல ஃபார்மில் இருந்தாலும் காம்பீர் களத்தில் இருப்பதால் இடது, வலது ஜோடி ஆடினால் நன்றாக இருக்கும் என்பதும் இலங்கையின் சுழல் பந்தைத் தன்னால் மேலும் சிறப்பாக ஆட முடியும் என்பதும் தான் எடுத்த முடிவுக்குக் காரணம் என்றார் தோனி.

துணிச்சலான முடிவுக்கு ஏற்ப ஆடினார் தோனி. காம்பீர் கிட்டத்தட்ட முனிவரைப் போன்ற அமைதியுடன் ஆடினார். இருவரும் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து வந்தார்கள். வெற்றியை நெருங்கும் சமயத்தில் காம்பீர் சற்றே கவனம் பிசகி ஆட்டமிழந்தாலும் (97), யுவராஜ் சிங் தோனிக்குத் துணையாகக் கடைசிவரை நின்றார்.

ஆட்டத்தைக் கச்சிதமாக முடிப்பதில் வல்லவரான தோனி, குலசேகரா வீசிய 49-வது ஓவரின் இரண்டாவது பந்தை லாங் ஆன் திசையில் எல்லைக் கோட்டுக்கு வெளியில் அனுப்பினார். அரங்கம் அதிர்ந்தது. முகமெல்லாம் சிரிப்பாக சச்சின் டெண்டுல்கர் வெளியே ஓடி வந்தார். தொடர் நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யுவராஜ் சிங் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். 28 ஆண்டுகள் கழித்து கோப்பை மீண்டும் இந்தியர்களின் கைக்கு வந்தது.

(நாளை… இந்தியா இந்த முறை கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ளுமா?)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x