Last Updated : 08 Feb, 2015 11:55 AM

 

Published : 08 Feb 2015 11:55 AM
Last Updated : 08 Feb 2015 11:55 AM

2003 உலகக் கோப்பை: புத்தெழுச்சி பெற்ற இந்தியா

ரசிகர்களின் ஆவேசத்தால் தூண்டப்பட்ட இந்திய அணி அதன் பிறகு தவறு செய்யவில்லை. ஆஸ்திரேலியாவுடனான போட்டிக்கு அடுத்து ஜிம்பாப்வே. அதில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்தது. சச்சின் (81), ராகுல் திராவிட் (43), வீரேந்திர சேவாக் (36) ஆகியோரின் பங்களிப்பு இந்தியா கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. பந்து வீச்சுக்குச் சாதகமான களம் என்பதால் இந்தியா நம்பிக்கையுடன் பந்து வீச்சைத் தொடங்கியது.

ஜவகல் ஸ்ரீநாத் தலைமையில் புதிய திறமைசாலிகளான ஜாகீர் கான், ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் திறம்படப் பந்து வீசினார்கள். ஹர்பஜன் சிங், சேவாகின் சுழலும் சவுரவ் கங்கூலியின் சிக்கனமான மித வேகப் பந்து வீச்சும் சேர்ந்து ஜிம்பாப்வேயை 44.4 ஓவர்களில் 172 ரன்களுக்குள் சுருட்டின. கங்கூலி 3 விக்கெட் எடுத்தார். ஆட்ட நாயகன் சச்சின்.

இந்தப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இந்தியா அடுத்து எதிர்கொண்ட கற்றுக்குட்டி நமீபியாவை நொறுக்கித் தள்ளியது. சச்சினும் (152) கங்கூலியும் (112) சதம் அடிக்க, 2 விக்கெட் இழப்புக்கு 311 ரன் அடித்தது. 42.3 ஓவர்களில் 130 ரன்களுக்குள் நமீபியாவின் இன்னிங்ஸை முடித்துவைத்தது. யுவராஜ் சிங் 4.3 ஓவர்களில் 6 ரன் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார்.

முதல் நெருக்கடி

என்னதான் புதிய வேகத்துடன் இந்தியா ஆடினாலும் ஆஸ்திரேலியா வுடனான தோல்விக்குப் பிறகு அது ஆடிய இரு அணிகளும் அவ்வளவாக வலுவற்ற அணிகள். அவற்றை உண் மையான சோதனையாக எடுத்துக் கொள்ள முடியாது. எனவே அடுத்து வந்த இங்கிலாந்துடனான போட்டி இந்திய ரசிகர்களின் பதற்றத்தைக் கூட்டியது. போட்டிக்கான பரபரப்பும் கணிசமாக அதிகரித்திருந்தது.

டாஸை வென்ற இந்தியா மட்டை வீச்சைத் தேர்ந்தெடுத்தது. 10 ஓவர்கள் முடிவதற்குள் இந்தியா 60 ரன் எடுத்தது. பத்தாவது ஓவர் முடியும் சமயத்தில் சேவாக் (23) ஆட்டமிழந்தார். 50 ரன் அடித்த சச்சின் 16-வது ஓவரில் ஆட்டமிழ்ந்தபோது ஸ்கோர் 91. அதன் பிறகு இந்தியாவின் ரன் வேகம் குறைந்தது. கங்கூலியும் (19) தினேஷ் மோங்கியாவும் (39) ஆட்டமிழந்த பிறகு ஆட்டம் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததுபோல் தோன்றியது. ஆனால் திராவிடும் (62) யுவராஜ் சிங்கும் (42) ரன் வேகத்தையும் ஸ்கோரையும் கணிசமாக உயர்த்தினார்கள். யுவராஜ் 38 பந்துகளில் 42 அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 250-9. வெற்றிக்கு உத்தரவாதமான ஸ்கோர் இல்லையென்றாலும் டர்பன், கிங்ஸ்மீட் ஆடுகளத்துக்கு கவுரவமான ஸ்கோர் என்று சொல்லலாம்.

கை கொடுத்த பந்து வீச்சு

இரண்டாம் ஓவரில் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் நிக் நைட்டை முகம்மது கைஃப் அபாரபான ஃபீல்டிங்கின் மூலம் ரன் அவுட் செய்து தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். 23 பந்துகளில் 8 ரன் எடுத்த மார்க் ட்ரெஸ்கொத்திக், ஜாகீர் கான் பந்தில் வீழ்ந்தார். 12 ஓவர் முடிவில் இங்கிலாந்து 28-2 என்று திணறிக்கொண்டிருந்தது. ஜாகீர் கான் 6 ஓவர் 14 ரன் ஒரு விக்கெட். ஸ்ரீநாத் 6 ஓவர் 13 ரன்.

13-வது ஓவரை வீச வந்த ஆஷிஷ் நெஹ்ரா செய்த மாயம் இவ்வளவு சிக்கனமான பந்து வீச்சை மறக்கச் செய்தது. இரண்டு நாட்களுக்கு முன்புவரை கணுக்கால் வீங்கி அவதிப் பட்டுக்கொண்டிருந்த நெஹ்ரா அணி யில் இடம்பெற்றதே ஒரு அதிசயம் என்று சொல்லலாம். அவர் நிகழ்த்திய சாதனையை இன்னொரு அதிசயம் என்று சொல்ல வேண்டும். முதல் இரண்டு ஓவர்களைச் சிக்கனமாக வீசிய நெஹ்ரா அடுத்த ஓவரில் விஸ்வரூபம் எடுத்தார். அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். பிறகு மேலும் 4 விக்கெட்களை வீழ்த்தினார். துல்லியமான அளவில் வீசப்பட்ட அவரது பந்துகள் கணிக்க முடியாத விதத்தில்

ஸ்விங் ஆகி இங்கிலாந்தின் மட்டை வரிசையைப் பிளந்தன. 45.3 ஓவர்களில் 168 ரன்னுக்கு இங்கிலாந்து ஆட்டமிழந்தது. நெஹ்ராவின் கணக்கு 10-2-23-6. வேகப்பந்துக்குச் சாதகமான களங்களில் இந்தியாவாலும் பிற அணிகளை மிரட்ட முடியும் என்பதைக் காட்டிய பந்து வீச்சு அது.

அடுத்த போட்டியில் இந்தியா தன் பரம வைரியான பாகிஸ்தானை வீழ்த்தினாலும் வென்ற விதத்தில் ஆகச் சிறந்த வெற்றி என்று இங்கிலாந்துடனான போட்டியைத் தான் சொல்ல வேண்டும்.

போட்டிகளின் உச்சம்

சிறப்பாக ஆடியும் கோப்பையை வெல்ல முடியாமல் போன இந்திய அணியை ரசிகர்கள் மனமார மன்னிக்கத் தயாராக இருந்தார்கள் என்றால் அதற்கு மூன்று காரணங்கள். ஒன்று தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து இறுதிவரை வந்த சாதனை. இரண்டு, உலகிலேயே வலுவான அணியிடம் தோற்றதில் வருத்தப்பட எதுவும் இல்லை. மூன்றாவது காரணம், முதல் சுற்றில் பாகிஸ்தானை வென்றது.

கிட்டத்தட்ட இறுதிப் போட்டிக்கு இருக்கும் பரபரப்பும் பதற்றமும் இந்தப் போட்டிக்கு இருந்தது. பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணி. குறிப்பாக வலுவான பந்து வீச்சு. ஷோயிப் அக்தரின் புயல் வீச்சும் வாசிம் அக்ரம், வக்கார் யூனுஸின் அனுபவமும் சேர்ந்து பந்து வீச்சை வலுவானதாக்கின.

சையீத் அன்வர், இன்சமாம் உல் ஹக், யூசுஃப் யோஹானா, யூனிஸ் கான் ஆகியோருடன் அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போன ஷாஹித் அஃப்ரிதியும் சேர எந்தப் பந்துவீச்சுக்கும் சவால்விடும் மட்டை வலு பாகிஸ்தானிடம் இருந்தது. போதாக்குறைக்கு அப்துர் ரசாக் என்னும் ஆல் ரவுண்டரும் அணியை வலுப்படுத்தினார்.

இந்த அணியை எதிர்கொள்ளும் வலிமை இந்தியவுக்கு இருந்தது. ஆனால் பாகிஸ்தானின் ஆவேசத் துக்கு இந்தியா ஈடுகொடுக்குமா என்னும் கவலை ரசிகர்களைச் சூழந்தது. இங்கிலந்தை அபாரமாக வென்ற மூன்றே நாட்களில் மிகக் கடுமையான போட்டியை எதிர்கொள்ள இந்தியா தயாரானது.

இங்கிலாந்திடமும் ஆஸ்திரேலியா விடமும் தோற்று இந்தியாவுடனான போட்டியை வென்றே ஆக வேண்டும் என்னும் நிலையில் பாகிஸ்தான் அந்தப் போட்டியை எதிர்கொண்டது. இரு அணிகளுமே அதை இறுதிப் போட்டி அளவுக்கு மதிப் பளித்தன.

இரு நாடுகளின் ரசிகர்களும் செஞ்சூரியன் மைதானத்தில் குவிந்தார்கள். தொலை தூரத்தில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முன்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் தத்தமது அணிகளின் வெற்றியை எதிர்நோக்கிப் பதற்றத்துடன் அமர்ந்திருந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x