Published : 16 Feb 2015 12:42 PM
Last Updated : 16 Feb 2015 12:42 PM

வரியின்றி அமையாது உலகு!

புதிய அரசின் பட்ஜெட் நெருங்கி வரும் வேளையில் வருமான வரி தொடர்பாக பல சலுகைகளை மக்கள் எதிர்நோக்கிக் காத்திருக் கிறார்கள். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும், மக்கள் செலவு செய்வதற்கும், சேமிப்பதற்கும் அதிக வாய்ப்பு கொடுக்கப்படும். இதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

இதற்கு விடை தெரிய நாம் பட்ஜெட் வரை காத்திருந்துதான் ஆக வேண்டும் என்றாலும் உலக அளவில் வருமான வரி எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

இந்தியாவின் அதிகபட்ச வருமான வரி தற்போது 33 சதவீதமாக இருக்கிறது. நம்மை விட குறைவாக வருமான வரி வசூலிக்கும் நாடுகளும் உள்ளன. பஹ்ரைன், குவைத், ஒமன், கத்தார் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் வருமான வரி என்று எதுவும் இல்லை.

33 சதவீதம் நமக்கு அதிகமாக தோன்றினாலும், நம்மை விட அதிகமாக வருமான வரி வசூலிக்கும் நாடுகளும் உள்ளன. ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் நம்மை விட அதிகமாகவே வருமான வரி வசூல் செய்கிறார்கள்.

மற்ற நாடுகளைப் போலவே அதிகம் சம்பாதிப்பவர்களுக்கு அதிகமாக வரி விதிக்கலாமா என்று கடந்த ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

வருமான வரி தொடர்பாக பொருளாதார பேராசிரியர் ஒருவரிடம் பேசும்போது அதிக வரி என்பது தேவையற்றது. ஒரு காலத்தில் இந்தியாவிலும் அதிக அளவுக்கு வரிவிகிதங்கள் இருந்தன. 1973-71 ஆண்டில் அதிகபட்சமாக 97.50 சதவீத வருமான வரி இருந்தது. அதாவது அதிகபட்ச வரி வரம்புக்குள் இருப்பவர் 100 ரூபாய் சம்பாதிக்கும் பட்சத்தில் 2.50 ரூபாய் மட்டுமே அவர் எடுத்துக்கொள்ள கூடிய நிலை இருந்தது.

இந்த காரணத்தால்தான் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகரித்தது. அந்த கருப்பு பணத்தின் பிரச்சினை இன்று வரைக்கும் தொடர்கிறது. இன்னும் நம்மால் அதை இங்கு கொண்டு வர முடியவில்லை. அதனால் வருமான வரி அளவை உயர்த்துவது தேவை இல்லாதது என்றார்.

மேலும் வருமான வரி விகிதத்தைக் குறைக்கும் பட்சத்தில் இன்னும் பலரும் தாமாக முன்வந்து வரி செலுத்துவார்கள் என்றார்.

இப்போதைக்கு இந்தியாவில் 17 கோடி பான் (பிஏஎன் நிரந்தர கணக்கு எண்) கார்டுகள் இருந்தாலும், 3 சதவீத இந்தியர்கள் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். ஆனால் 20 சதவீத சீனர்களும், 45 சதவீத அமெரிக்கர்களும் வருமான வரி செலுத்துகிறார்கள்.

இந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றால் வருமான வரி விகிதங்களை குறைத்தால் மட்டுமே பெரும்பாலானவர்களை இந்த வளையத்துக்குள் கொண்டுவர முடியும்.

வரி மற்றும் மரணத்தை தடுக்க முடியாது என்று 200 வருடங்களுக்கு முன்பு பெஞ்சமின் பிராங்ளின் கூறியிருக் கிறார். மரணம் யார் கையிலும் இல்லை. ஆனால் வரிச் சலுகைகளை கொடுக்க அரசாங்கத்தால் முடியும். சலுகை கிடைக் குமா என்பதை அறிய பிப். 28 தேதி வரை பொறுத்திருந்துதான் ஆக வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x