Last Updated : 29 Jan, 2015 11:04 AM

 

Published : 29 Jan 2015 11:04 AM
Last Updated : 29 Jan 2015 11:04 AM

நடப்பு நிதி ஆண்டில் ஓ.என்.ஜி.சி. பங்கு விலக்கல்: அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வந்தாலும் நடப்பு நிதி ஆண்டுக்குள் ஓஎன்ஜிசி பங்கு விலக்கல் இருக்கும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதியாக தெரிவித்தார்.

பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியின் 5 சதவீத பங்கு களை விலக்கிகொள்வதன் மூலம் ரூ.17,000 கோடி முதல் ரூ.18,000 கோடி ரூபாய் அளவுக்கு திரட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. கச்சா எண்ணெய் விலை 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்தது மற்றும் மானியத் தொகை அதிகரித்தது ஆகிய காரணங்களால் இந்த பங்கின் விலை கணிசமாக குறைந்தது.

கடந்த ஜூன் மாதம் 472 ரூபாயில் வர்த்தகமான இந்த பங்கு இப்போது நேற்றைய வர்த்தக முடிவின் படி 353 ரூபாயில் இருந்தது. தற்போதைய சந்தை நிலவரப்படி ரூ 15,000 கோடி அளவுக்குதான் நிதி திரட்ட முடியும். இருந்தாலும் நடப்பு நிதி ஆண்டுக்குள் பங்கு விலக்கு செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் ஓ.என்.ஜி.சி. இருக்கிறது என்று இந்திய எரிசக்தி மாநாட்டில் அமைச்சர் பிரதான் தெரிவித்தார்.

கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் மானிய பகிர்வு குறித்து விரைவில் மாற்றங்கள் செய்யப்படும் என்றார். தவிர நால்கோ, ஐஓசி, பிஹெச்இஎல் உள்ளிட்ட நிறுவ னங்களின் சில சதவீத பங்குகளை விற்பனை செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x