Published : 24 Apr 2014 09:42 PM
Last Updated : 24 Apr 2014 09:42 PM

பெங்களூருக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி

ஷார்ஜாவில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வெறும் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பெங்களூர் அணியால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

வெற்றி இலக்கான 151 ரன்களை விரட்டிய பெங்களூர் அணிக்கு, துவக்க வீரர்கள் படேல், டாகாவாலே சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். பவர்ப்ளே முடியும் போது பெங்களூர் அணி 6 ஓவர்களில் 49 ரன்கள் எடுத்திருந்தது. காலிஸ் வீசிய முதல் ஓவரிலேயேஎ டாகாவாலேவை 40 ரன்களுக்கு வீழ்த்தினார்.

அடுத்த ஓவரில் வினய் குமார் பார்த்தீவ் படேலை 21 ரன்களுக்கு வெளியேற்றினார். தொடர்ந்து களத்தில் இருந்த கோலி, யுவராஜ் சிங் இணை சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 25 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் கோலி 31 ரன்களுக்கு சுனில் நரைனின் சுழலில் வீழ்ந்தார். பிறகு ஆடிய டிவில்லியர்ஸ் சுதாரித்து ரன்கள் எடுபப்தற்குள் யுவராஜ் சிங்கும் ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் டிவில்லியர்ஸ், மார்கல் ஆகியோர் களத்தில் இருந்தனர். பெங்களூரின் வசம் 6 விக்கெட்டுகளும் மீதம் இருந்தன. வினய் குமார் வீசிய அந்த ஓவரின் 4-வது பந்தில் டிவில்லியர்ஸ் அடித்த பந்தை அபாரமாக கேட்ச் பிடித்த கிறிஸ் லின், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி 2 பந்துகளில் 6 ரன்கள் தேவைப்பட. 3 ரன்கள் மட்டுமே வந்தது. இதனால் பெங்களூர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

பேட்டிங்கில் 45 ரன்கள் சேர்த்ததோடு திறமையான கேட்ச் பிடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்த கிறிஸ் லின், ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. முதல் ஓவரிலேயே காம்பிர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இந்தத் தொடரில் காம்பிர் தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து களமிறங்கிய பாண்டேவும், 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த கிறிஸ் லின், காலிஸுடன் ஜோடி சேர்ந்து, அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார். 3-வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த இந்த இணை 61 பந்துகளில் 80 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் குவித்தது. அதிரடியாக விளையாடிய லின் 31 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யூசுப் பதான் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார்.

காலிஸ் 43 ரன்களுக்கும், உத்தப்பா 22 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 7 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்களை குவித்தது.

டக் அவுட்: கம்பீர் ‘சாதனை’

இந்தப் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் இந்த ஐபிஎல் போட்டியில் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் டக்அவுட் ஆகியுள்ளார் கொல்கத்தா கேப்டன் கௌதம் கம்பீர். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 10 போட்டிகளில் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற சா(சோ)தனையை படைத்துள்ளார் கம்பீர். இதற்கு முன்பு காலிஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் 9 போட்டிகளில் டக் அவுட் ஆகியிருந்ததே ‘சாதனை’யாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x