Published : 19 Jan 2015 09:18 AM
Last Updated : 19 Jan 2015 09:18 AM
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாக உள்ள நிலையில் புதிதாக ஏழு ஆளுநர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மத்தியில் பாஜக அரசு பதவி யேற்ற பிறகு காங்கிரஸ் ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் கள் பதவி விலகுமாறு நிர்பந் தம் அளிக்கப்பட்டது. அதன்படி ஷீலா தீட்சித் (கேரளா), எம்.கே. நாராயணன் (மேற்கு வங்கம்), பி.வி. வாஞ்சூ (கோவா), சேகர் தத் (சத்தீஸ்கர்) உள்ளிட்டோர் அடுத்தடுத்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தனர். மிசோரம் ஆளுநர் கமலா பெனிவால், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஐந்து காலியிடங்கள்
தற்போது பிஹார், அசாம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஆளுநர் பதவி காலியாக உள்ளது.
மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி பிஹார், மேகாலயா மாநிலங்களின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வருகிறார். அதேபோல நாகாலாந்து ஆளுநர் பி.பி.ஆச்சார்யா அசாம், திரிபுரா மாநிலங்களின் கூடுதல் ஆளுநராகவும், உத்தராகண்ட் ஆளுநர் கே.கே.பால் மணிப்பூர் ஆளுநராகவும் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக ஆளுநர் விரைவில் ஓய்வு
பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீல் வரும் 21-ம் தேதியும் இமாச்சலப் பிரதேச ஆளுநர் ஊர்மிளா சிங் வரும் 24-ம் தேதியும் ஓய்வு பெற உள்ளனர். அடுத்த சில மாதங்களில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா, ஒடிஸா ஆளுநர் எஸ்.சி.ஜமீர் ஆகியோர் ஓய்வு பெறுகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியபோது, தற்போது ஆளுநர் பதவி காலியாக உள்ள மாநிலங்களில் இன்னும் 15 முதல் 20 நாட்களுக்குள் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள். மொத்தம் 7 ஆளுநர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT