ஹோட்டல் அறையில் பேய் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் புகார்

ஹோட்டல் அறையில் பேய் இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் புகார்
Updated on
1 min read

நியூஸிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்குள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளது.

இந்நிலையில் அணியில் இடம் பெற்றுள்ள ஆல் ரவுண்டர் ஹாரிஸ் சொஹைல் தனது அறையில் பேய் இருப்பதாகக் கூறி அங்கிருந்து வெளியேறினார்.

இது தொடர்பாக பயிற்சியாளருக்கு அவர் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது சொஹைல் நடுக்கத்துடன் காணப்பட்டார். அவருக்கு லேசாக காய்ச்சலும் இருந்தது.

பேய் இருப்பதாக கூறியதற்கான காரணம் குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அவரிடம் கேட்டனர். அப்போது தான் படுக்கையில் படுத்திருந்தபோது அது தானாக ஆடியது. பேய்தான் இந்த வேலையைச் செய்துள்ளது என்று அவர் கூறினார். இது ஹோட்டல் நிர்வாகத்தினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

அவர்கள் அந்த அறைக்கு சென்று பரிசோதித்தனர். அறையில் சந்தேகத்துக்கிடமான எந்த நடவடிக்கையும் நடந்ததாக தெரியவரவில்லை. தங்கள் ஹோட்டலில் பேய் நடமாட்டம் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும் சொஹைல் அந்த அறைக்கு மீண்டும் செல்ல மறுத்துவிட்டார்.

உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் சொஹைல் இடம் பெற்றுள்ளார். உலகக் கோப்பைக்கு முன்பு பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி நியூஸிலாந்து வந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in