Published : 13 Jan 2015 08:05 PM
Last Updated : 13 Jan 2015 08:05 PM

இந்திய பவுலர்களின் மோசமான வீச்சுக்கு கேப்டன்களே காரணம்: இயன் சாப்பல்

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னேற்றத்தைத் தடுப்பது கேப்டன்களின் தவறான அணுகுமுறையே என்கிறார் இயன் சாப்பல்.

இது குறித்து ஈ.எஸ்.பி.என். கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் அவர் எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பது வருமாறு:

"உத்தி ரீதியாக, வலுவான இளம் பேட்ஸ்மென்களை சர்வதேச கிரிக்கெட்டிற்கு கொண்டு வருவதில் இந்தியா மற்ற கிரிக்கெட் நாடுகளை விட பல மைல் தூரம் முன்னால் உள்ளது. இது ஆஸ்திரேலியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணிகளுக்கே பொறாமை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், கேப்டன்சி, பவுலிங், அருகில் கேட்ச் பிடித்தல் ஆகிய பிரிவுகளில் இந்தியா இன்னும் சில தூரம் செல்ல வேண்டியுள்ளது.

இந்திய பந்துவீச்சின் எதிர்காலம் பற்றி கணிக்கையில், மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசும் பவுலர்கள் இருக்கிறார்கள் என்பதே. ஆனால், உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்துவதற்கு வேகம் மட்டும் போதாது. எப்படி வீசினால் முன்னிலை பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளை விரைவில் கைப்பற்ற முடியும் என்பதை கைகொள்வது அவசியம்.

இப்போதைக்கு மிகவும் சீரற்ற பந்து வீச்சாகவே அது உள்ளது. வேகம் என்பது துல்லியத்துடன் தொடர்புடையது, துல்லியம் இல்லையெனில் வேகம், வேகமாக ரன்களைக் குவிக்க அனுமதிப்பதில் போய்தான் முடியும். ஆஸ்திரேலியாவின் ஒவ்வொரு முதல் இன்னிங்ஸ்களிலும் இந்தியா 500 ரன்களை குறைந்தது கொடுத்து வந்துள்ளது.

இப்படிக் கூறுகையில் பவுலர்கள் மீது குற்றம் சுமத்துவதாக தெரியும், ஆனால் இது உண்மையிலிருந்து வெகுதூரம் விலகியுள்ளது. பவுலர்கள் மோசமாக வீசுவதற்கு பங்களிப்பு செய்தவர்களில் பிரதானமானவர் கேப்டன் தோனியும் விராட் கோலியும்.

இடது கை பேட்ஸ்மென்களுக்கு பைத்தியக்காரத்தனமாக தொடக்கத்திலிருந்தே நீண்ட நேரம் ரவுண்ட் த விக்கெட்டில் வீசச் சொல்வதிலிருந்து (அடிலெய்ட்), ஓவருக்கு ஓவர் பவுலர்களை மாற்றிக் கொண்டேயிருப்பது (சிட்னி) என்பது வரையிலும் கேப்டன்கள் பவுலர்களை திணறடித்துள்ளனர். சில விசித்திரமான இந்திய கேப்டன்சியும் இந்தத் தொடரில் நடந்தது.

விராட் கோலி பொறுமையற்றவராகச் செயல்பட்டதால் பவுலர்கள் விக்கெட்டுகளை எடுக்க தாறுமாறாக எதை எதையோ செய்தனர். கோலிக்கு யோசனைகள் இல்லாமல் இல்லை, அது கேப்டன்சிக்கு அழகுதான், ஆனால் பவுலர்களை சீராக துல்லியமாக வீசச் செய்ய கோலி அவர்களை பழக்க வேண்டும். இதற்கு பொறுமை தேவை, எடுத்தோம் கவிழ்த்தோம் அணுகுமுறை பயனளிக்காது.

தோனியோ, இந்தியாவுக்கு வெளியே யோசனைகள் வற்றியவராக விரைவிலேயே ஆகிவிடுகிறார். உடனே பவுன்சர் வீசச்சொல்வது இரண்டு பீல்டர்களை டீப்பில் நிறுத்துவது என்று முடிவெடுக்கிறார். இது ஒருபோதும் பயனளிக்கவே அளிக்காது. பவுலர்களை வளர்க்காமல் இது அழிக்கவே செய்யும்.

டெஸ்ட் போட்டிகளில் மிக முன்னதாகவே பீல்டர்களை தள்ளி நிறுத்தத் தொடங்குகின்றனர். பேட்ஸ்மென் தவறு செய்ய காத்திருக்கின்றனர். நல்ல பேட்ஸ்மென்கள் இதற்கு ஒரு போதும் மசியப்போவதில்லை. இந்தத் தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் சீராக இந்திய பரிசுகளை பெற்று தங்கள் மொத்த ரன் விகித்தை ஏற்றிக் கொண்டதுதான் நடந்தது.

ஒரு உண்மையான ஆடுகளத்தில் நல்ல பேட்ஸ்மென்களை இந்திய கேப்டன்கள் வீழ்த்த கடுமையாக போராடுவது விசித்திரமாகவே படுகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் அஸ்வின் மட்டுமே பாடம் கற்றுக் கொண்டுள்ளார். அஸ்வின் நன்றாக வீசினார், ஆனால் அருகில் இருக்கும் பீல்டர்கள் அவருக்கு உதவிகரமாக இல்லை.

குறுகிய ஓவர்கள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் அதிகம் விளையாடுவது காரணம் என்று கூறப்படுகிறது, ஆனால், இது இந்திய பேட்டிங்கை பாதிக்கவில்லையே? ஆஸ்திரேலியாவுக்கு வந்து வெறும் பேட்டிங்கினால் மட்டுமே டெஸ்டில் வெல்ல முடியாது என்பதை இந்தியா திரும்பத் திரும்ப நிரூபித்து வருகிறது.”

இவ்வாறு அந்தப் பத்தியில் அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x