Last Updated : 02 Jan, 2015 10:45 AM

 

Published : 02 Jan 2015 10:45 AM
Last Updated : 02 Jan 2015 10:45 AM

காஷ்மீரில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் அவகாசம் கோரியது பாஜக

காஷ்மீரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கூடுதலாக கால அவ காசம் அளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநரிடம் பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் யாருடன் யார் கூட்டணி அமைப்பார்கள் என்பது இதுவரை புரியாத புதிராக உள்ளது. அந்த மாநிலத்தில் நாள் தோறும் புதிய கூட்டணிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனால் அடுத்தநாளே அவை புஸ்வாணமாகிவிடுகின்றன.

இந்நிலையில் ஆட்சியமைப்பது தொடர்பாக ஜனவரி 1-ம் தேதிக்குள் தங்களது முடிவை தெரிவிக்குமாறு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி), பாஜக ஆகியவற்றுக்கு ஆளுநர் என்.என்.வோரா கெடு விதித்திருந்தார்.

அதன்படி மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி நேற்றுமுன்தினம் ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தங்கள் கட்சிக்கு 55 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்று ஆளுநரிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவரிடம், எந்தெந்த கட்சிகள் மக்கள் ஜனநாயக கட்சியை ஆதரிக்கின்றன என்று கேள்வி எழுப்பியபோது நேரடியாக பதில் அளிக்கவில்லை.

எனினும் பி.டி.பி.யின் குறைந்தபட்ச செயல்திட்டங்களை ஏற்கும் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று அவர் அறிவித்தார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயை புகழ்ந்து பேசிய அவர், அதே பாணியில் பாஜக தலைமை நடக்க வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக் காட்டினார். எனவே பிடிபி-பாஜக கூட்டணி அமையக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் ஜுகல் கிஷோர் சர்மா நேற்று ஆளுநர் என்.என்.வோராவை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஜனவரி 19-ம் தேதிக்குள் ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் கெடு விதித்துள்ளார். பாஜக தரப்பில் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளோம்.

மாநிலத்தில் 6 ஆண்டுகள் நிலையான ஆட்சி நடைபெற வேண்டும். எனவே அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டோம். மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கவே மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

ஆட்சி அமைப்பது தொடர்பாக முக்கிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். மற்றொரு மூத்த தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறியபோது, ஜம்முவை சேர்ந்த ஒருவர் முதல்வராக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அந்த முயற்சியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

87 உறுப்பினர்கள் கொண்ட காஷ்மீர் சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சி- 28, பாஜக- 25, தேசிய மாநாட்டு கட்சி -15, காங்கிரஸ் -12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x