Published : 18 Jan 2015 12:08 PM
Last Updated : 18 Jan 2015 12:08 PM

உயர் நீதிமன்ற தடை உத்தரவு எதிரொலி: வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு கேள்விக்குறியாகும் பரிதாபம்

அரசு பணியில் பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழக அரசுப் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்கள் தேர்வுசெய்யப்படுகிறார்கள். பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களை தேர்வுசெய்வதற் காக ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்குகிறது.

இதேபோல், தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஊழியர்கள், மாவட்ட அல்லது மாநில அளவிலான வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் தேர்வுசெய்யப்படுகிறார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து வரும் காலியிடங்களுக்கு ஏற்ப, ஒரு இடத்துக்கு 5 பேர் என்ற விகிதாச்சார அடிப் படையில் வேலைவாய்ப்பு அலுவலகம், பதிவுதாரர்களை பரிந்துரை செய்யும். அதில் இருந்து தேவைப்படும் பணி யாளர்களை சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வுசெய்துகொள்ளும்.

இந்நிலையில், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை நியமனத்துக்கு வகை செய்யும் அரசு பணிகள் விதி 10-ஏ செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த வாரம் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இதனால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு முறை கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக சுமார் 94 லட்சம் பேர் காத்திருக்கிறார்கள். பதிவு மூப்பு முறை நியமனத்துக்கு சிக்கல் வந்துள்ளதால் அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை பதிவுதாரர் களுக்கு வழிகாட்டும் வகையில் வேலைவாய்ப்பு வழிகாட்டி ஆலோசனை மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக நாடு முழுவதும் 100 மாதிரி வேலை வாய்ப்பு அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளன. அதில் தமிழ்நாட்டில் உள்ள கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x