Published : 30 Jan 2015 04:49 PM
Last Updated : 30 Jan 2015 04:49 PM

பேட்டிங்கில் மீண்டும் சொதப்பி கோட்டைவிட்ட இந்தியா: போராடி இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து முன்னேறியது. பெர்த் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து.

பெர்த்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் கடைசி லீக் போட்டியில் 201 ரன்கள் இலக்கைத் துரத்திய இங்கிலாந்து போராடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

ஆனாலும் 201 ரன்களை எடுக்க இங்கிலாந்து திணறியது. கடைசியில் டெய்லர், பட்லர் இணைந்து ஸ்கோரை 191 ரன்களுக்குக் கொண்டு வந்தும் இருவரும் ஆட்டமிழந்தவுடன் சிறு பதட்டம் நிலவியது. கடைசியில் 46.5 ஓவர்களில் 201/7 என்று 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

66/5 விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்தை கதிகலக்கிய இந்திய அணி அதன் பிறகு ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் டெய்லர் ஆகியோரின் நிதானமான பேட்டிங்கை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜோஸ் பட்லர் 21 ரன்களில் இருந்த போது ரெய்னா ஸ்லிப்பில் விட்ட கேட்ச் இந்திய அணியின் வாய்ப்புகள் ஆணியறைந்து விட்டது. ஒருவேளை இந்த கேட்சைப் பிடித்திருந்தால் நெருக்கடி கொடுத்திருக்கலாம்.

பவர் பிளே 36-வது ஓவர் தொடங்கும் போது இங்கிலாந்து 141/5 என்று வெற்றியின் சாயலை அடைந்திருந்தது. பவர் பிளேயில் ஏதாவது டிரிக் நிகழுமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மொகமது ஷமி, அக்சர் படேல் ஆகியோர் வீசிய ஓவர்களை ஜேம்ஸ் டெய்லர், ஜோஸ் பட்லர் நிதானமாகக் கையாண்டனர். காரணம் தேவைப்படும் ரன் விகிதம் எப்போதும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தது. இது போன்ற சூழல்களில் தேவைப்படும் தீவிரம் இந்திய பவுலர்களிடத்தில் இல்லை. ஜடேஜா நீண்ட நாட்கள் கழித்து வந்து பந்து வீசியதில் அவரால் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.

ஒரு ஆட்டம் மழை காரணமாக நடைபெறாததால் 2 புள்ளிகள் பெற்ற இந்திய அணி இன்றைய போட்டியில் வென்றால் இறுதிக்குச் செல்லும் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில் 200 ரன்களையே எடுத்திருந்த இந்திய அணி நிச்சயம் இறுதிக்குச் செல்ல வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.

ஸ்டூவர்ட் பின்னியின் 3 விக்கெட்டுகள்:

அந்த அணியின் முக்கிய வீரர் இயன் பெல் 10 ரன்கள் எடுத்திருந்த போது மோஹித் சர்மா வீசிய பந்து சரேலென உள்ளே ஸ்விங் ஆனதோடு தாழ்வாக வந்தது. பெல் அதனை கால்காப்பில் வாங்க நடுவர் எல்.பி. என்று தீர்ப்பளித்தார்.

மொயின் அலி, ரூட் ஆகியோர் 14/1 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை 40 ரன்களுக்கு உயர்த்தினர். மொயீன் அலி தனது வழக்கமான பாணி ஆட்டத்தை ஆட முடியவில்லை. பிட்ச் ஒரு காரணம், பந்து வீச்சும் ஒரு காரணம். 17 ரன்களை அவர் 34 பந்துகளில் எடுத்திருந்த போது அக்சர் படேல் பந்தை தேவையில்லாமல் மேலேறி வந்து தூக்கி அடிக்க அம்பாட்டி ராயுடு அபாரமாக கேட்ச் பிடித்தார்.

மற்றொரு அபாய வீரரான ஜோ ரூட் 3 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர் பின்னி வீசிய ஆஃப் ஸ்டம்ப் பந்தை டிரைவ் ஆட அதனை கட்டுப்படுத்தத் தவறினார் பந்து நேராக பின்னியிடமே கேட்ச் ஆனது. 50 ரன்கள் எடுக்கும் முன்னரே 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்தது.

கேப்டன் மோர்கன் 2 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டூவர்ட் பின்னி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தை வீச மோர்கன் தனது ஷாட்டை சற்றே செக் செய்ய பந்து மிட் ஆனில் தவனுக்கு எளிதான கேட்சாக முடிந்தது.

பொபாரா 4 ரன்கள் எடுத்த நிலையில் பின்னி வீசிய பந்தை கட் செய்தார் ஆனால் பாயிண்டில் நெஞ்சுயர கேட்சாக அது ஜடேஜாவிடம் தஞ்சமடைந்தது.

பேட்டிங்கில் சொதப்பிய ரெய்னா கேட்சையும் கோட்டை விட்டார்:

66/5 என்று திணறி வந்த நிலையில் ஜோஸ் பட்லர், ஜேம்ஸ் டெய்லருடன் இணைந்து ஸ்கோரை 101 ரன்களுக்கு உயர்த்தினார் அப்போது பட்லர் 21 ரன்களில் இருந்த போது 27-வது ஓவரை ஜடேஜா வீச 4-வது பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றார் பட்லர், பந்து ஆனால் பந்து ஸ்லிப்பில் கேட்சாகச் செல்ல ரெய்னா அதனை கோட்டை விட்டார்.

ஏற்கெனவே இந்த ஓவரின் முதல் பந்தில் விராட் கோலி பீல்டிங்கில் கோட்டை விட்டதனால் பவுண்டரி அடித்திருந்தார் பட்லர்.

இந்த பார்ட்னர்ஷிப் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்தது. ஜேம்ஸ் டெய்லர் (82) ஜோஸ் பட்லர் (67) ஆகியோர் இணைந்து 23.2 ஓவர்களில் 125 ரன்களைச் சேர்த்தனர். இந்த ஜோடி மிகச்சிறப்பாக ஆடியது என்று கூறுவதை விட இலக்கு அதிகமில்லாததும், இந்தியப் பந்து வீச்சில் தாக்கம் ஏற்படுத்தும், அச்சுறுத்தும் பவுலர்கள் இல்லாததும் அவர்கள் வெற்றிக்கு உதவின என்று கூறுவதே பொருந்தும். கடைசியாக ஸ்கோர் 191 ரன்களை எட்டிய போது ஜேம்ஸ் டெய்லர், மோஹித் சர்மா பந்தை டாப் எட்ஜ் செய்ய பந்து நேராக டீப் பைன்லெக் திசையில் பின்னியிடம் கேட்சாக அமைந்தது.

தோனியின் விளங்காத கேப்டன்சி

ஜடேஜா மோசமாக வீசியும், எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையிலும் அவருக்கு 10 ஓவர்களை வீசக் கொடுத்து, ஸ்டூவர்ட் பின்னிக்கு முன்னால் தோனி முடித்ததன் ரகசியம் என்னவென்று அவரிடம்தான் கேட்க வேண்டும். குறைந்த ரன்கள் இலக்கில் தனது அன்றைய தின சிறந்த பவுலரை வீசச் செய்வதுதான் எல்லா கேப்டன்களின் அணுகுமுறையாக இருக்கும். ஆனால், நம் தோனி வித்தியாசமாக சிந்திப்பவராயிற்றே.. கடைசி வரை பின்னியை அவரது 8 ஓவர்களுக்குப் பிறகு தோனி பந்து வீச கொண்டு வரவில்லை!

கடைசியில் வெற்றிக்கு 7 ரன்கள் இருக்கும் நிலையில் ஜோஸ் பட்லர் (67 ) மொகமது ஷமி பந்தை டீப் கவர் திசையில் தூக்கி அடித்து ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இங்கிலாந்து 193/7 என்று ஆனது. கிறிஸ் வோக்ஸ், ஸ்டூவர்ட் பிராட் இணைந்தனர். இருவரும் வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

8 ஓவர்களில் 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஸ்டூவர்ட் பின்னியின் முழு 10 ஓவர்கள் முடிக்கப்படவில்லை. மாறாக ஜடேஜா 9.5 ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்காமல் 62 ரன்களை விட்டுக் கொடுத்தார். மோஹித் சர்மா 10 ஓவர்கள்ல் 36 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். படேல் நன்றாக வீசி 39 ரன்களுக்கு 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

நன்றாகத் தொடங்கி 200 ரன்களுக்குச் சுருண்ட இந்திய அணி

பெர்த்தில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா 83/0 என்ற நிலையிலிருந்து 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பசுந்தரை ஆட்டக்களத்தில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. அஜிங்கிய ரஹானே, ஷிகர் தவன் தொடக்க நிச்சயமின்மைகளுக்குப் பிறகு நன்றாக விளையாடி ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.

கிறிஸ் வோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுலிங்கைத் தொடங்க பந்துகள் பயங்கரமாக எகிறின. தவன் சற்றே திணறினாலும் நிற்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆடி 38 ரன்கள் எடுத்தார். முதல் பவுண்டரியே ஆட்டத்தின் 6-வது ஓவரில்தான் வந்தது. தவன் தனது வழக்கமான கட் ஷாட்டில் பவுண்டரி அடித்தார். பிறகு பிராட் பந்தில் ஒரு சைனீஸ் கட் ஷாட் பவுண்டரி. அதன் பிறகு ஒரு அபாரமான கவர் டிரைவ் என்று 65 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து கட் ஷாட்டில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வோக்ஸ் பந்தில் வெளியேறினார்.

20 ஓவர்களில் இந்தியா 83 ரன்கள் என்ற தொடக்கத்தைப் பெற்றது. டவுன் ஆர்டர் பிரச்சினையில் தோனியினால் நிலையான முடிவு எடுக்க முடியாத நிலையில் இன்று கோலி களமிறக்கப்பட்டார். ரஹானே முதலில் சாதாரண பிட்ச் என்று நினைத்து சில ஷாட்களை ஆடினார். ஆனால் அவையெல்லாம் பீல்டர்களைக் கடந்து சென்று விழுந்ததால் பிழைத்தார்.

விராட் கோலி 8 ரன்கள் எடுத்து மொயீன் அலியிடம் வீழ்ந்தார். தேவையில்லாத ஷாட். ரெய்னா, பிரிஸ்பனில் அவுட் ஆனது போலவே மொயீன் அலியை மேலேறி வந்து ஆட முயன்றார். அவர் ஆஃப் ஸ்டம்ப் லைனில் மேலேறி வந்திருந்தால் அவரது கவர் திசையில் முயற்சி செய்த ஷாட் மாட்டியிருக்கலாம். ஆனால் லெக் ஸ்டம்ப் லைனில் அவர் மேலேறி வந்ததால் எட்ஜ் எடுத்து 1 ரன்னில் அவுட் ஆனார்.

ராயுடு களமிறங்கி பிராட் பந்தில் ஒரு டென்னிஸ் ஷாட் பவுண்டரியை நேராக அடித்தார். ஆனால் தேர்ட் மேன் திசையில் அடித்து விட்டு சுலபமாக 1 ரன் எடுக்கலாம் என்ற துணைக்கண்ட முயற்சியை இந்திய வீரர்கள் கைவிட்டால் நல்லது என்றே தோன்றுகிறது. 12 ரன்கள் எடுத்து அவர் பிராட் பந்தை அவ்வாறு ஆட முயன்று கூடுதல் பவுன்ஸ் காரணமாக பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பவர் பிளே தொடங்க இன்னும் சில பந்துகளே இருக்கும் போது ராயுடு அவுட் ஆனார். இதுதான் பிரச்சினை. பவர் பிளேயிற்கு கொஞ்சம் பந்துகளே இருக்கும் போது நின்று ஆட முடியாமல் அவுட் ஆனால் தோனி களமிறங்கி என்ன செய்வதென்று தெரியாமல் திணறியதுதான் நடந்தது.

இடையே ரஹானே ஒரு அபாரமான ஹூக் ஷாட்டில் மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்சரை அடித்து 101 பந்துகளில் 73 ரன்களை எட்டியிருந்தார். தோனியும் அவரும் நிலைத்து ஆடுவார்கள் என்ற நிலையில் ரஹானேயும் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்து ஃபின் பந்தை எட்ஜ் செய்து வெளியேறினார்.

பின்னி 7 ரன்களில் மீண்டும் அதே ஷாட்டில் இம்முறை பெல்லின் அபார ஸ்லிப் கேட்சிற்கு வெளியேறினார். வலது புறம் நன்றாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார் பெல். தோனி 3 பவுண்டரிகளுடன் 38 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து ஆடி வந்த போது பவுன்சர் ஒன்று அவரது ஹெல்மெட்டைத் தாக்கியது. ஆனால் ஒரு பந்து அதே லெந்த்தில் விழுந்து தாழ்வாக எல்.பி.ஆனார். ஜேம்ஸ் ஆண்டர்சன் தோனியை வழியனுப்பினார்.

ரவீந்தர் ஜடேஜா மிகவும் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்தார். நீண்ட நாட்கள் கழித்து களமிறங்கிய அவர் முதலில் நின்று ஆடியிருக்க வேண்டும், பிட்ச் அவர் விளையாடும் இந்திய பிட்ச் என்று நினைத்து விட்டார் போலும். பிராட் பந்தை மேலேறி வந்து அசிங்கமாக தூக்கி அடித்து 5 ரன்னில் வெளியேறினார்.

அக்சர் படேல் 1 ரன்னில் ஃபின் பந்தில் அவுட் ஆனார். ஆனால் மொகமது ஷமி கடைசியில் சில அபாரமான ஷாட்களை விளையாடி 3 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 25 ரன்கள் எடுக்க இந்தியா 165/9 என்ற நிலையிலிருந்து 200 ரன்களை எட்டியது. மோஹித் சர்மா 7 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஃபின் 3 விக்கெட்டுகளை எடுக்க, வோக்ஸ், பிராட், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மொயீன் அலி மீண்டும் பிரமாதமாக வீசி 35 ரன்களையே 10 ஓவர்களில் விட்டுக் கொடுத்தார். இன்னும் 20 அல்லது 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் இங்கிலாந்தை கொஞ்சம் டென்ஷன் படுத்தியிருக்கலாம்.

உலகக்கோப்பை ஆட்டங்களுக்குள் இந்திய அணி தனது ஆட்டத்தை பல மடங்கு உயர்த்த வேண்டியுள்ள நிலையில் இருக்கிறது. தாக்கம் செலுத்தும் வீரர்கள் இல்லை. கோலி போன்ற வீரர்களை நிலையான டவுன் ஆர்டரில் இறங்க விடாமல் மாற்றி மாற்றி களமிறக்கி அவரது ஆட்டத்தையும் காலி செய்யும் தோனியின் கேப்டன்சி குறித்து நிறைய கேள்விகள் எழுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x