Published : 09 Jan 2015 11:21 AM
Last Updated : 09 Jan 2015 11:21 AM

சென்னை ஓபன்: வாவ்ரிங்கா - பவுதிஸ்டா ஜோடி அதிர்ச்சி தோல்வி

ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் உலகின் 14-ம் நிலை வீரரான ஃபெலிஸியானோ லோபஸ் தோல்வி அடைந்துள்ளார். இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் வாவ்ரிங்கா பவுதிஸ்டா ஜோடி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

20-வது ஏர்செல்-சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் உலகின் 14-ம் நிலை வீரரான ஃபெலிஸியானோ லோபஸ், அல்ஜாஸ் பெடேனை எதிர்கொண்டார். லோபஸின் வெற்றியை அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், பெடேன் அபாரமாக ஆடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் லோபஸை வென்றார்.

இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் வாவ்ரிங்கா பவுதிஸ்டா ஜோடி, புரவ் ராஜா (இந்தியா), அடில் ஷமஸ்தின் ஜோடியை எதிர்கொண்டது. யாரும் எதிர்பாராத விதத்தில் ராஜா-ஷமஸ்தின் ஜோடி முதல் செட்டை 7-6 என வென்றது.

இதனால் அடுத்த செட்டில் மிகவும் தீவிரமாக ஆடிய வாவ்ரிங்கா ஜோடி, 6-4 என வென்று சமன் செய்தது. இதன் பின்னர், ஆட்டத்தை வெல்வதில் இரு ஜோடிகளுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டது. இறுதியில், புரவ் ராஜா, அடில் ஷமஸ்தின் ஜோடி 7-6, 4-6, 10-4 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா பவுதிஸ்டா ஜோடியை வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x