Published : 10 Jan 2015 12:58 PM
Last Updated : 10 Jan 2015 12:58 PM

திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவர இருக்கிறது.

இந்தியாவுக்கு இருபது ஓவர் உலககக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவற்றை பெற்றுத் தந்ததுடன், டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை முதலிடத்துக்கு கொண்டு சென்றவர் என்ற பெருமையும் தோனிக்கு உண்டு. இந்திய கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனும் அவர்தான்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றிகளை எதிர்கொண்டாரோ அதே அளவுக்கு விமர்சனங்களில் இருந்தும் அவர் தப்பவில்லை. கேப்டனாக இருந்து பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்த அவர் சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். இந்த படத்துக்கு ‘தோனி’ என்றே பெயர் வைக்கப்படவுள்ளது. இதற்காக நடிகர், நடிகை தேர்வும், திரைக்கதை உருவாக்கும் பணியும் விறுவிறுப்பாக நடக்கிறது.

தோனி தனது வாழ்க்கையை படமாக எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதற்காக தயாரிப்பு நிறுவனம் ரூ.20 கோடி அளிக்க இருக்கிறது. லாபத்தில் பங்கு தருவதாகவும் உறுதி மொழி அளிக்கப்பட்டு உள்ளது. இதையும் சேர்த்து அவருக்கு ரூ.80 கோடி வரை கிடைக்கலாம் என்று தெரிகிறது. இந்தியாவில் யாருக்கும் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பதற்காக இவ்வளவு பெரிய தொகை கொடுத்தது இல்லை என்று கூறப்படுகிறது. இதிலும் தோனி சாதனை படைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x