Published : 24 Jan 2015 11:47 AM
Last Updated : 24 Jan 2015 11:47 AM

அமைச்சரின் மருமகன் தூண்டுதலால் போலீஸார் துன்புறுத்தல்: திமுக செயலர் மனு

திண்டுக்கல் மாவட்டம், வேம்பார்பட்டி ஒன்றிய திமுக செயலர் ஆர்.வெள்ளைச்சாமி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

மின்துறை அமைச்சரின் மருமகன் கண்ணனுக்கும், எனக்கும் முன்விரோதம் உள்ளது. இதனால் கண்ணனின் தூண்டுதல்பேரில் சாணார்பட்டி போலீஸார் என் மீது பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

அதில் ஒரு வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. புகார்தாரர் நீதிமன்றத்தில் ஆஜராகி தான் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என்று கூறியதால் அந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும் கண்ணனின் நிர்பந்தத்தால் போலீஸார் என்னைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வருகின்றனர்.

சாணார்பட்டி ஆய்வாளர் மற்றும் போலீஸார் கடந்த 15-ம் தேதி எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து பிரச்சினை செய்தனர். தினமும் போலீஸார் என் வீட்டுக்கு வந்து தொந்தரவு செய்கின்றனர். எனவே, சாணார்பட்டி ஆய்வாளர் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் எஸ்பியிடம் மனு கொடுத்தேன்.

அதன் அடிப்படையில் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு, என்னை தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x