Published : 13 Dec 2014 12:44 PM
Last Updated : 13 Dec 2014 12:44 PM

முதல் டெஸ்டை வென்றது ஆஸி. - கோட்டை விட்ட இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியை, ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நாள் முடிய வெறும் 11 ஓவர்களே இருந்த நிலையில், இந்திய பேட்டிங் வரிசை தாக்குப் பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

மதிய தேநீர் இடைவேளை வரை 205 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த இந்திய அணி, முரளி விஜய் 99 ரன்களில் ஆட்டமிழந்தத்தைத் தொடர்ந்து, வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. முடிவில் 315 ரன்கள் எடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை முடித்தது. இந்திய கேப்டன் விராட் கோலி (141 ரன்கள்) சதமடித்தது வீணானது.

ரஹானே ரன் ஏதும் எடுக்காமலும், ரோஹித் சர்மா 6 ரன்களுடனும், சாஹா 13 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். ஒரு கட்டத்தில் வெற்றிவாய்ப்புக்கு அருகில் இருந்த இந்திய அணி, பேட்டிங்கில் சொதப்பியதால் டிரா செய்யக்கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. தனித்துப் போராடிய விராட் கோலிக்கு இணை கொடுத்து ஆட இந்திய பேட்ஸ்மென் தவறினர்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் லயான் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணி வெற்றி பெற முக்கியக் காரணமாய் அமைந்தார். முதல் இன்னிங்ஸிலும் இவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17-ஆம் தேதி பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x