

ஐபிஎல் சூதாட்டம், மேட்ச் பிக்சிங் தொடர்பாக உச்ச நீதிமன்றம் நியமித்த முத்கல் குழு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசன், ஐபிஎல் தலைமை செயல்பாட்டு அதிகாரி சுந்தர் ராமன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.
இப்போது இந்த விசாரணை யின்போது அவர்கள் கூறிய தகவல்கள் அடங்கிய ஒலி நாடாவை தங்களிடம் வழங்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் தோனி உள்ள நிலையில் அவரது பேச்சு அடங்கிய ஒலி நாடாவை நீதிமன்றத்தில் பிசிசிஐ கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தோனிக்கு நெருக்கடி அளிக்கும் நடவடிக்கையாகவும் கருதப்படுகிறது.
ஐபிஎல் சூதாட்ட புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய் யப்பனுக்கு சூதாட்டத்தில் உள்ள தொடர்பு குறித்த விவரங்களை முத்கல் குழுவிடம் தெரிவிக்காமல் தோனி மறைத்து பொய்களைக் கூறியுள்ளார் என்று இந்த வழக்கில் பிஹார் கிரிக்கெட் சங்கம் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ஹரீஸ் சால்வே ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.
ஆனால் அப்போது தோனி எந்த தவறும் செய்யவில்லை என்று பிசிசிஐ சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.பிசிசிஐ தலைவராக இருந்த என்.சீனிவாசனை தற்காலிகமாக நீக்கிவிட்டு, ஐபிஎல் போட்டி முடியும் வரை சுநீல் காவஸ்கரை பிசிசிஐ தலைவராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் நியமித்தது. இந்நிலையில் தோனி, சீனிவாசன் உள்ளிட்டோரது பேச்சு அடங்கிய ஒலி நாடாவை பிசிசிஐ கோரியுள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.