Published : 30 Dec 2014 07:09 PM
Last Updated : 30 Dec 2014 07:09 PM

24 பந்துகள் மீதமிருக்கையில் போட்டியை முடித்துக் கொண்டது: ஆஸி. ரசிகர்கள் ஏமாற்றம்

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் 70 ஓவர்களில் இந்திய அணிக்கு இலக்கு 384 ரன்கள். ஆனால் 66 ஓவர்களிலேயே ஆட்டம் டிரா என இரு அணித்தலைவர்களும் ஒப்புக் கொண்டு முடித்துக் கொண்டனர்.

இதில் கேப்டன் தோனியின் பங்கு ஒன்றுமில்லை. ஸ்மித் 24 பந்துகளை வீச முடிவெடுத்தால் இந்திய அணி ஆடியே ஆக வேண்டும். ஸ்மித் முடிவு ஏன் ஆச்சரியமளிக்கிறது எனில், மீதமுள்ள 4 இந்திய கீழ்வரிசை விக்கெட்டுகளை வீழ்த்த 24 பந்துகள் போதும் என்றே முந்தைய டெஸ்ட்கள் கூறுகின்றன.

அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தன் கடைசி 3 விக்கெட்டுகளை 20 பந்துகளில் இழந்தது.

அடிலெய்ட் டெஸ்ட் 2-வது இன்னிங்சில் இந்தியா தனது கடைசி 3 விக்கெட்டுகளை 18 பந்துகளில் இழந்தது.

2-வதாக பிரிஸ்பனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் கடைசி 3 விக்கெட்டுகள் கொஞ்சம் கூடுதலாக சுமார் 30 பந்துகளில் காலியாகியுள்ளது.

மெல்பர்ன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் கடைசி 3 விக்கெட்டுகள் 16 பந்துகளில் சரிந்தது.

இப்படியிருக்கையில், இன்று 24 பந்துகள் மீதமுள்ள நிலையில் இன்னும் ஒரு விக்கெட்டை சாய்த்திருந்தாலே ஆஸ்திரேலியா வெற்றி வாய்ப்பிற்கு அருகில் வந்திருக்கும். ஆனால் ஏனோ டெஸ்ட் போட்டி முடித்துக் கொள்ளப்பட்டது.

இது ஏன் என ஆஸி. கேப்டன் ஸ்மித் விளக்கமளித்துள்ளார்: “வெற்றி கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. பவுலர்கள் அனைவரும் களைப்படைந்து விட்டனர். எனவே முடிக்க அதுவே சிறந்த நேரம். பிட்ச் உடையவில்லை, பெரிதாக ஒன்றும் நடந்தும் விடவில்லை. எனவே இதுதான் சரி என்று முடிவெடுத்தேன்” என்றார்.

ஆனால், ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாக ஆஸி. ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x