Published : 20 Dec 2014 02:51 PM
Last Updated : 20 Dec 2014 02:51 PM

தவான் காயத்தினால் வீரர்களிடையே அமைதியின்மை: தோல்விக்குப் பிறகு தோனி

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் இன்று காலை ஷிகர் தவனுக்குப் பதிலாக திடீரென விராட் கோலி களமிறங்கியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதிகார பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் ஷிகர் தவன் வலைப்பயிற்சியில் காயமடைந்தார் என்பது மட்டும் அரசல்புரசலாக வர்ணனையில் தெரிவிக்கப்பட்டது. தவன் களமிறங்குவாரா மாட்டாரா என்பதில் அணியினரிடத்திலேயே நிச்சயமின்மை இருந்ததாகவும் விராட் கோலியை திடீரென களமிறங்க வைத்ததாகவும் தோனி கூறியுள்ளார்:

"ஷிகர் தவன் இறங்குவாரா இல்லையா என்பது பற்றி ஓய்வறையில் தெளிவான தகவல்கள் இல்லை. அதனால் விராட் கோலி இறங்குவாரா அல்லது தவன் தொடர்வாரா என்பதில் ஒரு இரண்டக நிலை ஏற்பட்டது.

நாங்கள் இந்த சூழ்நிலையை சரியாகக் கையாண்டதாக நான் கருதவில்லை. ஆனால் இறங்கும் பேட்ஸ்மென் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்க வேண்டும், அதனை எங்களால் செய்ய முடியவில்லை.

ஆம், நாங்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம், அந்தப் பிட்ச் நன்றாக இல்லை, தவானுக்கு அடிபட்டது உண்மைதான். ஆனால் அடிபட்டாலும் களமிறங்குவதில் எந்த வித சிரமமும் இருக்காத ஒரு நிலையே எப்போதும் போல் இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் மீண்டும் ஓய்வறைக்கு வந்தபோதுதான் தவன் வலியில் இருக்கிறார் என்பதும் அவர் பேட் செய்ய முடியாது என்றும் தெரியவந்தது. இதனால் விராட் கோலிக்கு களமிறங்க 5 முதல் 7 நிமிடங்களே இருந்தது. இதனால் ஓய்வறையில் சற்று அமைதியின்மை ஏற்பட்டது. அதிலிருந்து நாங்கள் மீளமுடியவில்லை. இதனை இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இப்படி முடிந்து விட்டது” என்றார் தோனி.

வலையில் விராட் கோலிக்கும் அடிபட்டது. 26 நாட் அவுட் என்று இருந்த தவன் ரிட்டையர் ஆக வேண்டிய நிலை ஏற்பட்டது. கோலி திடீரென களமிறங்கியதால் அவரால் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. 11 பந்துகளில் 1 ரன் எடுத்து மிட்செல் ஜான்சனிடம் பவுல்டு ஆக 71/1 லிருந்து 87/5 என்று இன்னிங்ஸ் தோல்வி கூட ஏற்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

பயிற்சிக்கான ஆடுகளங்கள் பற்றி இந்திய அணி நிர்வாகம் செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: “கடந்த 2 நாட்களாக பயிற்சிக்கு புதிய பிட்ச்களைக் கேட்டோம் ஆனால் தேய்ந்து முடிந்த பிட்சையே அளித்தனர். இதனால் இன்று காலை வலைப்பயிற்சியில் தவானுக்கு வலது மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. கோலிக்கும் அடிபட்டது. இதனால் தவானால் களமிறங்க முடியவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x