

ஐ.பி.எல் சூதாட்டப் புகாரை எந்த குழு விசாரிப்பது என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி முத்கல் குழு, ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்தது.
இதனையடுத்து, ஐபிஎல் போட்டியில் நடைபெற்றதாகக் கூறப்படும் சூதாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக விசாரிக்க புதிய குழு அமைப்பது தொடர்பான தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6-வது ஐ.பி.எல். போட்டியின் போது சென்னை அணியை மையமாக வைத்து நடைபெற்ற சூதாட்டமும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 3 வீரர்கள் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கியமாக சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினராக இருந்த என்.சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பனுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததாக வெளியான செல்போன் உரையாடல் பதிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் என்.சீனிவாசனை பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து தாற்காலிகமாக ஒதுக்கி வைத்தது. ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட முத்கல் குழு அறிக்கையில் என்.சீனிவாசன் உள்பட 13 பேரது பெயர்கள் இடம் பெற்றிருந்ததே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முக்கிய காரணம்.