Last Updated : 07 Jul, 2019 04:45 PM

 

Published : 07 Jul 2019 04:45 PM
Last Updated : 07 Jul 2019 04:45 PM

உலகக் கோப்பை இந்தியாவுக்குத்தான்: ஷோயப் அக்தர் ஆதரவு

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது. அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன.

மொத்தமுள்ள 10 அணிகளில் இந்திய அணி மட்டுமே ஒரு தோல்வியுடன் 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. வரும் செவ்வாய்கிழமை நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மோதுகிறது. இந்த ஆட்டம் ஓல்டு டிராபோர்டில் நடக்கிறது.

லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் ரத்தானதால் அப்போது இரு அணிகளும் மோதிக்கொள்ளவில்லை. இப்போது அரையிறுதியில் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தொடர்ந்து 3 தோல்விகளை சந்தித்து நம்பிக்கையற்ற நிலையில் இந்திய அணியை எதிர்கொள்கிறது நியூஸிலாந்து . நியூஸிலாந்தின் இப்போதைய நிலை இந்திய அணிக்கு சாதகமானது என்றே தென் ஆப்பிரிக்க கேப்டன் டூப்பிளசிஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தரும் உலகக் கோப்பையை இந்தியாதான் வெல்லும் என்று  ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் யூடியூப் வீடியோவில் கூறியுள்ளதாவது:

என்னைப் பொருத்தவரை அரையிறுதியில் இருக்கும் நெருக்கடியை, அழுத்தத்தை தாங்கி நியூஸிலாந்து அணி விளையாடமாட்டார்கள். என்னுடைய ஆசை எல்லாம் உலகக் கோப்பை துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில்தான் இருக்க வேண்டும் என்பதுதான்.  உலகக்கோப்பையை இந்தியா வென்றால் மகிழ்ச்சிதான். உலகக்கோப்யை துணைக்கண்டத்துக்கு இந்திய அணி கொண்டுவருவார்கள் என நம்புகிறேன்.

ரோஹித் சர்மாவின் பேட்டிங் மிகப் பிரமாதமாக இருக்கிறது. அவரின் ஷாட் தேர்வு, ஷாட்களை எந்த நேரத்தில் அடிக்க வேண்டும் எனும் திட்டம் அனைத்தும் அருமை. போட்டியின் சூழலை புரிந்து கொண்டு ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுகிறார். அவருக்கு துணையாக கே.எல்.ராகுலும் விளையாடுவது பலமாக இருக்கிறது.

அரையிறுதியில் நியூஸிலாந்துஅணியும், பாகிஸ்தான் அணியும் வெற்றிகள், புள்ளிகள் ஒரேமாதிரி இருந்தும் நியூஸிலாந்தைக் காட்டிலும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியும் எங்களால் அரையிறுதிக்குச் செல்ல முடியவில்லை. நிகர ரன்ரேட் முறையால் எங்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டது. என்னைப் பொருத்தவரை நிகர ரன் ரேட் என்பது மோசமான விஷயம்

இவ்வாறு அக்தர் தெரிவித்துள்ளார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x