Published : 13 Jul 2019 11:43 AM
Last Updated : 13 Jul 2019 11:43 AM
கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றபின் மகேந்திர சிங் தோனி பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாஜக தலைமையில் ஆட்சி நடந்துவருகிறது முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான தோனியை பாஜக சார்பில் களமிறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, கவுதம் கம்பீர், தோனியை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கம்பீருக்கு டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கம்பீர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக இருக்கிறார்.
இந்நிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தோனியையும் பாஜகவில் இணைய வைப்பதற்கான தீவிரமான பேச்சு நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பைப் போட்டி முடிந்தபின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதை மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தோனி ஓய்வு அறிவித்தபின் அவர் பாஜகவில் சேர்வதற்கே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், " தோனியிடம் நீண்டகாலமாக பேச்சு நடத்தி வருகிறோம். தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தபின் நிச்சயம் பாஜகவில் சேர்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.
தோனி எனது நெருங்கிய நண்பர். உலக அளவில் அவர் பெயர் பெற்ற வீரராக இருந்தாலும், அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன" எனத் தெரிவித்தார்.
பாஜக சார்பில் பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் கூறுகையில் " பல்வேறு முக்கியத் தலைவர்கள் தோனியுடன் பேச்சு நடத்தி பாஜகவில் சேர அழைப்பு விடுத்து வருகிறார்கள். தோனி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவர் பாஜகவுக்கு வருவதில் சந்தேகமில்லை, வியப்புமில்லை " எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT