Published : 13 Jul 2019 04:40 PM
Last Updated : 13 Jul 2019 04:40 PM

இந்திய அணியில் பிளவு?-ரோஹித், கோலி ஆதரவாளர்களாக பிரிந்த வீரர்கள்; கேப்டன்ஷிப்பில் மாற்றம்?

உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த சில நாட்களிலேயே, அணிக்குள் பிளவு இருப்பது வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

இந்திய அணியில் இருக்கும் வீரர்களில் கேப்டன் கோலிக்கு ஆதரவாக சிலர் இருப்பதாகவும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக சிலர் வீரர்கள் இருப்பாதகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால், தோல்விக்குப் பொறுப்பேற்று கோலியை கேப்டன்ஷிப்பில் இருந்து மாற்றிவிட்டு, அதற்கு பதிலாக ரோஹித் சர்மாவை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.

இந்தியில் வெளிவரும் தைனிக் ஜாக்ரன் நாளேடு இந்திய அணிக்குள் பிளவு இருப்பதாக கூறி செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் இந்திய அணியில் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும், கேப்டன் கோலியும் சேர்ந்து கொண்டு அணியில் தன்னிச்சையான பல முடிவுகளை எடுக்கிறார்கள், தங்களுக்கு தேவைப்பட்ட, வீரர்களை மட்டுமே தேர்வு செய்கிறார்கள். மற்றவர்களிடம் கலந்து பேசி எந்த முடிவும் எடுப்பதில்லை, இவர்களின் செயல்பாட்டால்தான் அணியில் நல்லவிதமான சூழல் கெட்டு, பிளவு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக விராட் கோலி தனக்கு தேவையான, தன்னுடைய  பேச்சைக் கேட்டும் நடக்கும் வீரர்களுக்கு அணியில் முன்னுரிமை தருவதாகவும், ரோஹித் சர்மா அறிவுறுத்தும் வீரர்களை தேர்வு செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 4-வது வரிசைக்கான வீரர்கள் தேர்வில் அம்பதி ராயுடுவை தேர்வு செய்வதா, அல்லது விஜய் சங்கரை தேர்வு செய்வதா என்பதில் கடும் போட்டி இருந்தது. இதில் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதே ஒருதரப்பான முடிவு என்று அந்த நாளேடு தெரிவித்துள்ளது.

அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா இருவரும் தவிர்க்க முடியாதவர்கள் இவர்களைத் தேர்வு செய்யாமல் இருக்க முடியாது. ஆனால், மற்ற வீரர்கள் தேர்வு செய்யும் விதத்தில் சார்புத்தன்மை கையில் எடுக்கப்படுகிறது. குறிப்பாக விராட் கோலியும், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் குறிப்பிட்ட சார்புடனும், அளவுகோலுடன் வீரர்களில் விளையாடும் 11 வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.எல்.ராகுல் உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக மிகவும் மோசமாக செயல்பட்டபோதிலும் கூட அவருக்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு இருந்ததால், அவர் தொடர்ந்து அணியில் நீடித்தார், 4-வது வரிசைக்கு என தேர்வு செய்யப்பட்ட ராகுல், தவணின் காயத்தால் தொடக்க வீரராக அனுப்பப்பட்டார். தொடக்க வீரராக வந்த மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பை தரப்படவில்லை.

இதேபோல யஜுவேந்திர சாஹல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இருப்பதால், விராட் கோலி தொடர்ந்து மோசமாகப் பந்துவீசியபோதிலும் அவர் இந்திய அணியில் தக்கவைக்கப்படுகிறார். பேட்டிங்கிலும் பெரிய அளவுக்கு சாஹலால் எந்தவிதமான பலனும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்காத போது கோலியின் ஆதரவால் தொடர்ந்து வாய்ப்பு பெற்றுள்ளார்.

இப்போதுள்ள சூழலில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் குல்தீப், சாஹல் இருவரையும் நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அணி வீரர்களுக்கு இடையே எழுந்துள்ள ஈகோ பிரச்சினை இன்னும் பெரிதாகவில்லை, விரைவில் இதுதொடர்பாக எந்தவீரராவது பேசும்போது அது பெரிதான அளவுக்கு வெடிக்கும்

பல வீரர்கள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும், பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருணையும் விரும்பவில்லை.இருந்தபோதிலும் தொடர்ந்து இருவரும் வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

குறிப்பாக பிசிசிஐ நிர்வகிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆதரவை ரவி சாஸ்திரி பெற்று இருப்பதால், சாஸ்திரி, விராட் கோலி எந்தவிதமான முடிவுகளை எடுத்தாலும், அதற்கு ஆதரவு இருந்து வருகிறது என்று நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த உலகக் கோப்பைப் போட்டிக்கு தயாராகும் வகையில் ரோஹித் சர்மாவை புதிய கேப்டனாக உருவாக்க வேண்டும் என்றும் வீரர்களிடையே பேசப்படுகிறது என்றும் அந்த நாளாடு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x