Published : 03 Jul 2019 02:50 PM
Last Updated : 03 Jul 2019 02:50 PM
இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள நிலையில், ஐஸ்லாந்து நாடு அவருக்கு சிறப்பு கம்பளம் விரித்துள்ளது.
ஐஸ்லாந்து நாட்டில் நிரந்தரக் குடியுரிமை தருகிறோம், தங்கள் நாட்டுக்காக விளையாட வாருங்கள் என்று குடியுரிமைக்கான விண்ணப்பத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது அந்நாட்டு வாரியம்.
உலகக் கோப்பைப் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவித்தபோது, நடுவரிசைக்கு தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் என 3 வகையான பிரிவுகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடியவர் என்பதால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார் என்று தேர்வுக் குழுத்தலைவர் பிரசாத் தெரிவித்தார்.
அதேசமயம், கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்திய அணியில் 4-வது இடத்துக்கு சரியான வீரர் அம்பதி ராயுடுதான் என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்து வந்தார். இதனால், உலகக்கோப்பைக்கான அணியில் அம்பதி ராயுடுவுக்கு இடம் கிடைக்கும் என்ற நிலை இருந்தது ஆனால், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதால் அம்பதி ராயுடு கடும் அதிருப்தியில் இருந்தார். மேலும் ரிசர்வ் வீரராக ராயுடுவை பிசிசிஐ வைத்திருந்தது விஜய் சங்கரை மறைமுகமாக விமர்சித்து, அம்பதி ராயுடு டிவிட்டரில் கருத்து தெரிவிதிருந்தார்.
இதற்கிடையே சமீபத்தில் உலகக் கோப்பைப் போட்டியில் காயமடைந்த ஷிகர் தவணுக்கு பதிலாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார்.
விஜய் சங்கருக்கு பதிலாக ரிசர்வ் வீரராக இருக்கும் தன்னைத் தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அணியில் சேர்க்கப்பட்டார். இதனால், இந்த முறையும் தனக்கு இருந்த வாய்ப்பு பறிபோய்விட்டதாக அம்பதி ராயுடு மிகவும் வேதனையுடன் இருந்ததாக கூறப்பட்டது.
இந்த சூழலில் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் ஓய்வு பெறுவதாக இன்று அம்பதி ராயுடு அறிவித்துள்ளார். .
அம்பதி ராயுடு இன்று ஓய்வு அறிவிக்கும் முன்பாக, நேற்று ஐஸ்லாந்து கிரிக்கெட் அம்பதி ராயுடுவுக்கு ட்விட்டரில் சிவப்பு கம்பள வாய்ப்பு ஒன்றை வழங்கியது. தங்கள் நாட்டு கிரிக்கெட் அணிக்காக அம்பதி ராயுடு விளையாட வந்தால் அதை வரவேற்கிறோம் எனத் தெரிவித்தது.
இதுகுறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் கூறுகையில், " மயங்க் அகர்வால் முதல்தரப் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், சராசரியாக 72.33 வைத்துள்ளார். ஆதலால், இப்போதாவது அம்பதி ராயுடு தன்னுடைய 3டி கண்ணாடியை இப்போது ஓரமாக வைத்துவிட வேண்டும். சாதாரண கண்ணாடி கொண்டு, நாங்கள் அவருக்காக தயாரித்து வழங்கியுள்ள ஆவணங்களை படிப்பது அவசியம். வாருங்கள் அம்பதி ராயுடு எங்களுடன் சேருங்கள். அம்பதி ராயுடுவின் விளையாட்டை நாங்கள் நேசிக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஐஸ்லாந்து கிரிக்கெட்டின் ட்விட் குறித்து அம்பதி ராயுடு தரப்பில் எந்தவிதமான கருத்தும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT