Published : 22 Aug 2017 10:49 AM
Last Updated : 22 Aug 2017 10:49 AM
உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடரில் சிறப்பாக செயல்படுவேன் என பி.வி.சிந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் தொடர் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், உலக சாம்பியன்ஷிப் தொடரில் இரு முறை வெண்கலப் பதக்கமும் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்துவுக்கு முதல் சுற்றில் ‘பை’ வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேரடியாக 2-வது சுற்றை சந்திக்க உள்ள சிந்து, இந்த சுற்றில் கொரியாவின் ஹிம் ஹயோ மின் அல்லது எகிப்தின் ஹடியா ஹாஸ்னியுடன் மோத உள்ளார். கால் இறுதியில் சிந்து, சீனாவின் சன் யுவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த தொடர் குறித்து சிந்து கூறும்போது, “ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு பிறகு 2 மாதங்கள் பயிற்சி பெற போதுமான நேரம் கிடைத்தது. தற்போது நன்றாக இருக்கிறேன், அதனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது. உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கத்தை எதிர்பார்க்கிறேன். இம்முறை வெண்கலப் பதக்கத்தை விட சிறப்பானதை பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக போராடுவேன்” என்றார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதும் உச்சத்துக்கு சென்ற 22 வயதான பி.வி.சிந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற சீனா ஓபன் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தியா ஓபன் ஆகியவற்றில் பட்டம் வென்றுள்ளார். சர்வதேச பாட்மிண்டன் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள அவர், உலக சாம்பியன் ஷிப் தொடரில் கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT