Last Updated : 13 Aug, 2017 01:07 PM

 

Published : 13 Aug 2017 01:07 PM
Last Updated : 13 Aug 2017 01:07 PM

மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரை இறுதிச் சுற்றில் பெடரர்

மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார்.

மாண்ட்ரியல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மாண்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால் இறுதிச் சுற்றில், சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர், ஸ்பெயின் வீரரான ராபர்டோ படிஸ்டா அகுட்டை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் 5 ஏஸ்களை பறக்கவிட்ட ரோஜர் பெடரர், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 68 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அகுட்டுக்கு எதிராக இந்த சீசனில் பெடரர் பெறும் 7-வது வெற்றியாகும் இது.

இந்தத் தொடரில் பெடரர் வெற்றி பெற்றால், அது இந்த ஆண்டில் பெடரர் பெறும் 6-வது சாம்பியன் பட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் பெடரருக்கு சவாலாக இருப்பார் என்று கருதப்பட்ட, ரபேல் நடால் கடந்த வியாழக்கிழமை டெனிஸ் ஷபல்போவிடம் தோற்றதால், இதில் பெடரர் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.

அரையிறுதிச் சுற்றில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாசை எதிர்த்து பெடரர் ஆடவுள்ளார். முன்னதாக நேற்று நடந்த மற்றொரு கால் இறுதிப் போட்டியில், ராபின் ஹாஸ் 4-6, 6-3, 6-3 என்ற செட்கணக்கில் அர்ஜென்டினா வீரரான டியாகோ ஸ்க்வார்ட்ஸ்மேனை வென்றார்.

வோஸ்னியாக்கி வெற்றி

டொரண்டோவில் நடந்த பெண்களுக்கான டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த கால் இறுதி ஆட்டத்தில் டென்மார்க் வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கி, உலகின் முதல் நிலை வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து ஆடினார். மழையின் இடையூறுகளுக்கு நடுவில் நடந்த இப்போட்டியில் வோஸ்னியாக்கி, 7-5, 6-7, 6-4 என்ற செட்கணக்கில் பிளிஸ்கோவாவை போராடி வென்றார். இது பிளிஸ்கோவாவுக்கு எதிராக வோஸ்னியாக்கி பெற்ற முதல் வெற்றியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றி குறித்து நிருபர்களிடம் கூறிய வோஸ்னியாக்கி, “இப்போட்டியில் பிளிஸ்கோவா சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார். பின்னர் அவர் சில தவறுகளைச் செய்தார். இதைப் பயன்படுத்தி நான் கடுமையாக போராடி வெற்றி பெற்றேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x