Published : 13 Aug 2017 01:03 PM
Last Updated : 13 Aug 2017 01:03 PM
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி இன்று தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இந்த அணியில் சுரேஷ் ரெய்னாவுக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இலங்கை அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
இந்த அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் அழைக்கப்படுவார் என கருதப்படுகிறது. அவர் கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அதேவேளையில் டி20 ஆட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்று 45 பந்துகளில் 63 ரன்கள் விளாசியிருந்தார். அதிரடி வீரரான அவர், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 16 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்படவில்லை. அதேவேளையில் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெற்ற உடல் தகுதி சோதனையில் சுரேஷ் ரெய்னா, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் கலந்து கொண்டார். இதனால் இலங்கை ஒருநாள் போட்டித் தொடரில் ரெய்னா தேர்வாக அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும் காயம் காரணமாககே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளதால் தொடக்க வீரருக்கான போட்டியில் அவரும் உள்ளார். இதேபோல் நடுக்கள வரிசை பேட்ஸ்மேன்களாக தேர்வாவதில் யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, கேதார் ஜாதவ், மணீஷ்பாண்டே, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரிடையே போட்டி நிலவக்கூடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT