Published : 13 Aug 2017 12:55 PM
Last Updated : 13 Aug 2017 12:55 PM
மொரீசியஸ், செயின்ட் கீட்ஸ் அணிகளுக்கு எதிரான முத்தரப்பு கால்பந்து தொடரானது வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கு உதவும் என இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் தெரிவித்துள்ளார்.
இந்தியா, மொரிசியஸ், செயின்ட் கீட்ஸ் ஆகிய கால்பந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் மும்பையில் வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரானது வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றுக்கு பெரும் உதவியாக இருக்கும் என என இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, மியான்மர், கிர்கிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஆசிய கோப்பை தகுதி சுற்றில் இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வரும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி மக்காவு அணியுடன் மோத உள்ளது.
ஆசிய கோப்பைக்கு முன்னுரிமை
இந்நிலையில் கான்ஸ்டான்டைன் கூறும்போது, “2019-ம் ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குகிறோம். மீண்டும் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது சிறப்பான விஷயம். நீண்ட நாட்களுக்கு பிறகு வீரர்கள் ஒருங்கிணைந்துள்ளனர்.
இதனால் சர்வதேச போட்டிகளுக்கு தகுந்தபடியான சிறந்த உடல் தகுதியை பெறுவதில் கடினமாக உழைக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மேலும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்குள்ளும் போட்டிகளை நடத்த வேண்டும்” என்றார்.
இந்திய கால்பந்து அணி கடைசியாக விளையாடிய 15 ஆட்டங்களில் 13ல் வெற்றி பெற்றிருந்ததால் தரவரிசைப் பட்டியலில் 97வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT