Last Updated : 01 Aug, 2017 07:02 PM

 

Published : 01 Aug 2017 07:02 PM
Last Updated : 01 Aug 2017 07:02 PM

காதுகேளாதோர் ஒலிம்பிக்கில் சாதித்த இந்திய அணியை வரவேற்க ஆளில்லை: விமான நிலையத்தை விட்டு கிளம்ப வீரர்கள் மறுப்பு

துருக்கியில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான 23-வது சம்மர் ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்களை வரவேற்க அரசுதரப்பிலிருந்து ஒருவர் கூட செல்லவில்லை. இதனையடுத்து விமான நிலையத்தை விட்டு புறப்பட மாட்டோம் என்று வீரர்கள் அதிருப்தியில் மறுத்துள்ளனர்.

46 வீரர்கள், உடன் சென்ற பயிற்சியாளர்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி வெளியிட்டனர். இந்த ஒலிம்பிக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்றுள்ளது இந்திய அணி.

வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலிடம் பேச விரும்பியதாகவும் ஆனால் வீர்ர்கள் விருப்பத்துக்கு அவர் இணங்கவில்லை என்றும் தெரிகிறது.

இது குறித்து இந்திய அணியின் சார்பாகப் பேசிய கேத்தன் ஷா கூறும் போது, “இந்திய வீரர்கள் இந்த தொடரில் 8 பிரிவுகளில் போட்டியிட்டனர். இதில் 3 பிரிவுகளில் பதக்கம் வென்றுள்ளோம். மல்யுத்தத்தில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்றுள்ளோம். லான் டென்னிஸில் வெண்கலம், கால்ஃப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளோம்.

பதக்கங்களை வென்ற அன்றே நாங்கள் மத்திய அரசிடம் நாட்டுக்கு நாங்கள் பெருமை சேர்த்ததாகத் தெரிவித்தோம். பதக்கம் வென்றவர்கள் நாட்டின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர். ஆனால் ஒருவர் கூட, விளையாட்டுத் துறை அமைச்சர் கூட எங்களை வரவேற்க வரவில்லை.

எனவே எங்களுக்குத் தேவையெல்லாம் விளையாட்டுத் துறை அமைச்சர் அல்லது எந்த ஒரு அரசு அதிகாரியும் எங்களை விமான நிலையத்தில் வந்து பாராட்டியே ஆக வேண்டும். ஆகஸ்ட் 1-ம் தேதி வருகிறோம் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்துள்ளோம். ஆனால் எந்தவொரு பதிலும் வரவில்லை. அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம், ஆனால் அவர்கள் இல்லை என்ற பதில்தான் கிடைக்கிறது” என்று கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x