Published : 05 Aug 2017 10:50 AM
Last Updated : 05 Aug 2017 10:50 AM
கால்பந்து லீக் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையைத் தட்டிச் சென்றுள்ளார் பிரேசில் நட்சத்திரம் நெய்மர்.
இவர் ஸ்பெயினின் பார்சிலோனா அணியிலிருந்து பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு மாறியுள்ளார்.
அதாவது பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி நெய்மரை இந்திய மதிப்பு படி சுமார் ரூ.1680 கோடிக்கு(222 மில்லியன் யூரோ) 5 ஆண்டுகள் காலம் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது. 2022-ம் ஆண்டு வரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்கு நெய்மர் விளையாடும் பட்சத்தில் அவர் வாராந்திர ஊதியமாக சுமார் ரூ. 4 கோடி பெறுவார்.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு வீரரை ஒப்பந்தம் செய்வது ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎப்ஏ) கட்டுப்பாட்டு விதிமுறைகளுக்கு ஏற்றதாக உள்ளதா என்று லா லிகா மற்றும் பார்சிலோனா கிளப்கள் கேள்வி எழுப்பி இதனை கூட்டமைப்புக்கு புகாராக அளிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு கடந்த ஆகஸ்டில் பால் போக்பா என்ற வீரர் யுவண்டஸ் அணியிலிருந்து மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு 105 மில்லியன் யூரோக்கள் தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதே அதிக தொகையாக இருந்து வந்தது, இதனை நெய்மர் ஒப்பந்தம் தற்போது முறியடித்து விட்டது.
நெய்மர் கூறும்போது, “பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் அணியுடன் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கிளப் சவாலானது, லட்சியங்கள் கொண்டது. இதன் ரசிகர்கள் விரும்பும் கோப்பைகளை வென்று தருவதே என் வேலை, இன்றிலிருந்து என் புதிய அணி சகாக்களுக்கு உதவுவதே என் கடமை. உலகம் முழுதும் இருக்கும் இந்த கிளப் ரசிகர்களுக்கு புதிய எல்லைகளைக் காட்ட விரும்புகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT