Published : 25 Jul 2017 10:24 AM
Last Updated : 25 Jul 2017 10:24 AM
வைரஸ் காய்ச்சல் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான நாளை காலே நகரில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார்.
கொழும்புவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரசிடென்ட் அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்திருந்தார். தோள்பட்டை காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ள அவர், சுமார் 3 மாதகாலத்துக்கு பிறகு தற்போதுதான் விளையாட ஆரம்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது.
இதனால் கொழும்பில் இன்று நடைபெற்ற பயிற்சியில், கே.எல்.ராகுல் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் விலகி உள்ளார். இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுலுக்கு பெரிய அளவிலான சுகாதார பிரச்சினைகள் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதல் டெஸ்ட்டில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. கே.எல். ராகுல் விளையாடாததால் ஷிகர் தவணுடன், தமிழக வீரர் அபிநவ் முகுந்த் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும்.
25 வயதான கே.எல்.ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடர், சாம்பியன்ஸ் டிராபி, மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் கலந்து கொள்ளவில்லை. கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய போது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதற்காக அவர் லண்டனில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய உள்ள கே.எல்.ராகுல் 4 சதங்கள், 7 அரை சதங்கள் அடித்துள்ளார். அவரது ரன்குவிப்பு சராசரி 44 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT