Published : 13 Jul 2017 10:12 AM
Last Updated : 13 Jul 2017 10:12 AM
மகளிர் ஹாக்கி உலக லீக் அரை இறுதி தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலி அணியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.
ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தை கோல்களின்றி டிராவில் முடித்திருந்தது. 2-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று 3-வது ஆட்டத்தில் சிலியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 38-வது நிமிடத்தில் பிரீத்தி துபே, பீல்டு கோல் அடித்து அசத்தினார்.
முன்னதாக சிலி அணிக்கு 4-வது நிமிடத்திலும், இந்திய அணிக்கு 12-வது நிமிடத்திலும் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இரு அணிகளும் அதை கோலாக மாற்றத் தவறின. 19-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை ராணி, இலக்கை நோக்கிய துல்லியமாக அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மிக அருகில் விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது.
2-வது பாதியில் இந்திய வீராங்கனைகள் சிலி அணிக்கு மேலும் நெருக்கடி கொடுத்தனர். தடுப்பு அரண்களை மீறி ராணி இலக்கை நோக்கி அடித்த பந்தை சிலி கோல்கீப்பர் அற்புதமாக தடுத்தார். ஆட்டத்தின் கடைசி பகுதியில் ரேணுகா யாதவ், மஞ்சள் அட்டை பெற்றதால் 10 பேருடன் இந்திய அணி விளையாடியது. எனினும் கடைசி வரை இந்திய வீராங்கனைகள், சிலி அணியை கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT