

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதையான 'ப்ளேயிங் இட் மை வே' (‘Playing It My Way’) மும்பையில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முதல் பிரதியை சச்சின் தன் தாய் ரஜ்னியிடம் வழங்கினார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சச்சின், "முதல் பிரதியை என் அம்மாவிடன் தந்தேன். அவரது முகத்தில் தெரிந்த பெருமிதம் விலைமதிக்க முடியாதது" என்று கூறினார். மேலும் #PlayingItMyWayLaunch என்ற ஹேஷ் டாக் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.
கடந்த வருடம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் தற்போது தனது சுயசரிதையை எழுதி வெளியிட்டுள்ளார். இரண்டாவது பிரதியை தனது முதல் பயிற்சியாளரான ராமாகந்த் அச்ரேகரிடம் வழங்கினார்.
இந்த பிரம்மாண்ட விழாவில் சச்சினுடன் இணைந்து விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சவுரவ் கங்குலி, வி.வி.எஸ் லக்ஷ்மண், ராகுல் டிராவிட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே இந்தப் புத்தகத்திலிருந்து சில பகுதிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.