Last Updated : 06 Nov, 2014 03:15 PM

 

Published : 06 Nov 2014 03:15 PM
Last Updated : 06 Nov 2014 03:15 PM

பயிற்சியாளராக கபில் ஏமாற்றமளித்தார்: சுயசரிதையில் சச்சின்

இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகத் திகழ்ந்த கபில் தேவ், பயிற்சியாளராக ஏமாற்றமளித்ததாக சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில் கூறியுள்ளார்.

"என்னுடைய கேப்டன்சியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது கபில் தேவ் பயிற்சியாளராக இருந்தார். இந்தியாவுக்கு விளையாடிய சிறந்த வீரர்களுள் ஒருவர் மேலும், அனைத்துகால சிறந்த ஆல்ரவுண்டர் அவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவரது பயிற்சியில் நான் நிறைய எதிர்பார்த்தேன்.

என்னைப் பொறுத்தவரை பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிக முக்கியமானது, குறிப்பாக அணியின் உத்திகளை வகுப்பதில் அவரது பங்கு மிக அதிகம் என்றே கருதுகிறேன், இந்த நிலையில் கபில் தேவை விட ஒருவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறந்த உத்திகளை வகுத்து விட முடியுமா என்ன?

ஆனால் அவரது ஈடுபாடு மற்றும் சிந்தனைப் போக்குகள் அணியை கேப்டனே வழிநடத்த வேண்டும், கேப்டனே உத்திகளையும், முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்பதாக இருந்தது. அதனால் உத்திகள் பற்றிய விவாதங்களில் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை” என்று கபில் மீதான ஏமாற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

மேலும், ஒரு உத்தியை தான் கையாண்டபோது அது தோல்வியிலும் அதே உத்தியை மற்ற கேப்டன் கையாளும் போது வெற்றியாகவும் மாறுவது பற்றி சச்சின் தனது சுயசரிதையில் கூறியிருப்பதாவது:

"1997-ஆம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி டிசம்பர் 14-ஆம் தேதி நடந்தது. நான் இந்தத் தொடரில் அணித் தேர்வாளர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப 4-ஆம் நிலையில் களமிறங்கினேன். சவுரவ், நவ்ஜோத் சிங் சித்து தொடக்கத்தில் களமிறங்கினர். சித்து அவுட் ஆகும் போது ஸ்கோர் 143/2. நான் அடுத்ததாக ராபின் சிங்கை அனுப்பினேன், அவர் இடது கை வீரர், மேலும் பாகிஸ்தானின் மன்சூர் அக்தர் லெக்ஸ்பின் வீசிக் கொண்டிருந்தார். எனவே பெரிய ஷாட்களை ஆட ராபின் சிங், அதுவும் இடது கை என்றால் பயனுள்ளதாக இருக்கும் என்று அனுப்பினேன், ஆனால் அவர் 3 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.

அந்தப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு எனது இந்த முடிவுதான் காரணம் என்றும் நான் களமிறங்கியிருக்க வேண்டும் என்றும் ஊடகங்கள் என்னை விமர்சித்தன.

ஆனால் ஒரு மாதம் கழித்து அசார் கேப்டனாக இருந்த போது, வங்கதேசத்தின் டாக்காவில் நடைபெற்ற சுதந்திரக் கோப்பை ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக நானும், சவுரவும் நல்லத் தொடக்கம் கொடுத்த பிறகு ராபின் சிங்கை இறக்கினார் அசார். இப்போது ராபின் சிங் 82 ரன்களை எடுக்க இந்தியா வெற்றி பெற்றது.

அதுவும் சக்லைன் முஷ்டாக் இருக்கும் போது ராபின் சிங்கை அவர் அனுப்பினார். ஆஃப் ஸ்பின்னரை இடது கை வீரர் எதிர்கொள்வது சற்று கடினம்தான், ஆனாலும் அன்று கைகூடியது.

நான் செய்த பரிசோதனை முயற்சி தோல்வி அடைய, அசார் செய்த பரிசோதனை வெற்றியடைந்தது. அருமையான உத்தி என்று அவரைப் பலரும் பாராட்டினர். அப்போதுதான் புரிந்தது, ‘வெற்றிக்கு நிறைய தந்தைகள், தோல்வியோ அனாதை’ என்று ஏன் கூறுகிறார்கள் என்பது.” என்று கூறியிருக்கிறார் சச்சின்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x