Published : 20 Jul 2017 08:38 PM
Last Updated : 20 Jul 2017 08:38 PM

என் கனவு அணிக்கு ‘டிஃபெண்டர்’ தோனிதான்: புரோ கபடி நிகழ்ச்சியில் சச்சின்

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் இதில் கலந்து கொள்ள உள்ளன. சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணி ‘தமிழ் தலைவாஸ்’ என்ற பெயரில் களமிறங்குகிறது. 'தமிழ் தலைவாஸ்' அணியின் தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழ் தலைவாஸ் அணியின் ஜெர்சி அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சச்சின், கமல்ஹாசன், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் சச்சின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்:

கபடியுடன் உங்களுக்கிருக்கும் உணர்ச்சிப்பூர்வமான உறவு என்ன?

நம் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதாவது ஒரு கட்டத்தில் நாம் கபடி விளையாடியிருப்போம். இந்த மேடையிலிருக்கும் அனைவரும் இதை ஒப்புக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

எனது மூன்றாவது வயதில் என நினைக்கிறேன். அப்போது மும்பையில் நடந்த முதல் கபடி போட்டியை நான் பார்த்தேன். அப்போது மைதானத்துக்குள் இருந்த உற்சாகம், அதிர்வு அட்டகாசமாக இருந்தது. நான் எப்போதுமே விளையாட்டு வீரர்களை போற்றியுள்ளேன். ஆனால் களத்துக்கு சென்று நேரடியாக பார்க்கும்போது அவர்கள் விளையாடும் வேகம், சுறுசுறுப்பு இன்னும் அற்புதமான உணர்வைத் தந்தது.

ஒரு விளையாட்டு வீரனாக களத்துக்கு சென்று உலகத்தின் முன் விளையாட, நமது கனவை நனவாக்க என்ன தேவை என்பது எனக்கு புரியும். நான் இங்கு கபடியை ஆதரிப்பவனாக மட்டும் வரவில்லை. இந்தியாவில் பொதுவாக அனைத்து விளையாட்டுகளையும் ஆதரிப்பவனாக வந்திருக்கிறேன்.

ஏனென்றால் இந்தியா உடல் பருமன் பிரச்சினையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. எனவே நாம் ஒவ்வொருவரும் ஆரோக்கியமாக இருக்க ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடவேண்டியது முக்கியம். ஏனென்றால் ஆரோக்கியமாற்ற மக்கள் கூட்டம் பேரழிவுக்கான ஆரம்பமே. அதனால் தான் விளையாட்டை ஆதரிக்கிறேன்.

இப்போது இங்கிருப்பதே எனது கனவு அணி தான். இவர்களைத் தாண்டி எனது கனவு கபடி அணி எப்படி இருக்கும் என கேட்டீர்களென்றால், ஒரு defender வேண்டுமென்றால், அதற்கு புகழ்பெற்ற எம்.எஸ்.தோனியை தேர்ந்தெடுப்பேன். அவர் பல கேட்ச்களை விட்டதில்லை. அடுத்து நன்றாக மூச்சை பிடித்து விளையாடுபவர் வேண்டும். பாடகர் சங்கர் மகாதேவன் போல யாரும் மூச்சைப் பிடித்துக் கொள்ள முடியாது.

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x