Published : 22 Jul 2017 09:26 AM
Last Updated : 22 Jul 2017 09:26 AM

யுஎஸ் ஓபன் பாட்மிண்டன்: கால் இறுதியில் காஷ்யப், பிரணாய்

யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டியின் கால் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்களான காஷ்யப், சமீர் வர்மா, பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அனாஹிம் நகரில் யுஎஸ் ஓபன் கிராண்ட் பிரிக்ஸ் பாட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஆடவர் பிரிவு 2-வது சுற்றில் இந்திய வீரரான காஷ்யப், ஹங்கேரியின் கிரிகெலி காஸை எதிர்த்து ஆடினார். இதில் காஷ்யப் 21-18, 17-6 என்று முன்னிலையில் இருந்தபோது காயம் காரணமாக கிரிகெலி ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் காஷ்யப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை 21-19, 21-10 என்ற செட்கணக்கில் காஷ்யப் வீழ்த்தினார்.

கால் இறுதி ஆட்டத்தில் மற்றொரு இந்திய வீரரான சமீர் வர்மாவை எதிர்த்து அவர் விளையாட உள்ளார். சமீர் வர்மா கால் இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள பிரேசில் வீரர் யோர் கோயல்ஹோவை 18-21, 21-14, 21-18 என்ற கணக்கில் போராடி வென்றார்.

இப்போட்டியில் மற்றொரு இந்திய வீரரான பிரணாய், 21-8, 14-21, 21-16 என்ற செட்கணக்கில் நெதர்லாந்து வீரரான கார்க் கால்ஜோவுவை வீழ்த்தி கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

மனு அட்ரி ஜோடி

கால் இறுதிச் சுற்றில், ஜப்பான் வீரரான கான்டா சுனேயாமாவை அவர் எதிர்கொள்ளவுள்ளார். இரட்டையர் பிரிவில் நடைபெற்றபோட்டியில் இந்தியாவின் மனு அட்ரி - சுமீத் ரெட்டி ஜோடி இந்தோனேஷியாவின் ஹென்ரா டான்ஜெயா - ஆண்ட்ரோ யுனாண்டோ ஜோடியை 21-16, 21-9 என்ற செட்கணக்கில் வென்றது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x