Published : 14 Jan 2014 12:54 PM
Last Updated : 14 Jan 2014 12:54 PM

நியூஸி. அணியை எளிதாகக் கருத மாட்டோம்: தோனி

நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணி நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் வரும் 19-ம் தேதி நேப்பியரில் நடைபெறவுள்ளது.

முன்னதாக கூடுதலாக ஒரு டெஸ்ட் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டிக்கும் திட்டமிடப்பட்டி ருந்தது. பிப்ரவரியில் இந்திய அணி ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க இருப்பதால் போட்டிகள் குறைக்கப்பட்டன. 2015-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலி யாவிலும் நியூஸிலாந்திலும் நடை பெறவுள்ளது. எனவே இப்போட்டி உலகக் கோப்பைக்கான பயிற்சியா கவும் இந்திய அணிக்கும் அமையும். ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஆனால் நியூஸிலாந்து 8-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் நியூஸிலாந்தில் கேப்டன் தோனி செய்தியாளர் களிடம் கூறியது: நியூஸிலாந்து அணி இப்போது சிறப்பானதாக உள்ளது. முக்கியமாக சிறந்த பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும் சொந்த மண்ணில் விளையாடும் நியூஸிலாந்து அணியை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஏனெனில் இங்கு விளையாடும்போது அவர்கள் கூடுதல் பலத்துடன் இருப்பார்கள். முதல்முறையாக நியூஸிலாந்தில் விளையாடும் எங்கள் வீரர்களுக்கு இது சவாலானதாகவே இருக்கும்.

வெளிநாடுகளில் விளையாடும் போது இந்திய அணியின் பந்து வீச்சு சிறப்பாக இல்லாதது குறித்து எப்போதும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் முன்பு இருந்ததை விட வெளிநாட்டில் எங்கள் பந்து வீச்சாளர்கள் இப்போது சிறப்பாகவே செயல்படு கின்றனர் என்றார். கடந்த மாதம் தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை. எனவே இப்போது நியூஸிலாந்து தொடர் குறித்து இந்திய ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

நியூஸிலாந்து சென்றடைந்தது இந்திய அணி

தோனி தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று நியூஸிலாந்து சென்றடைந்தனர். முன்னதாக நேற்று முன்தினம் மும்பையில் இருந்து அவர்கள் விமானத்தில் கிளம்பிச் சென்றனர்.

நியூஸிலாந்து சென்றடைந்ததை டுவிட்டர் இணையதளத்தில் விராட் கோலி பதிவு செய்துள்ளார். அதில் இதமான வானிலையுடன், ரசிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகளுடன் நியூஸிலாந்து எங்களை வரவேற்றுள்ளது. போட்டி நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். புஜாரா, ஜாகீர் கான், முரளி விஜய், உமேஷ் யாதவ் ஆகியோர் இப்போது இந்திய அணியினருடன் செல்லவில்லை. அவர்கள் பின்னர் சென்று அணி வீரர்களுடன் இணைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெட்டோரிக்கு வாய்ப்பு இல்லை

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் முன்னாள் கேப்டன் வெட்டோரி இடம் பெறமாட்டார். அவரது பெயர் அணியில் சேர்க்க பரிசீலிக்கப்படமாட்டாது என்று அந்த அணி பயிற்சியாளர் மைக் ஹிஸ்சன் கூறியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றும் நியூஸிலாந்து அணி நாளை அறிவிக்கப்பட இருக்கிறது. 35 வயதாகும் வெட்டோரி சமீபகாலமாக முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வருகிறார்.

நியூஸிலாந்து அணியில் மிக இளம் வயதிலேயே (18) டெஸ்ட் அணியில் இடம் பெற்றவர் என்ற பெருமையைப் பெற்றவர் வெட்டோரி. 112 டெஸ்ட் போட்டிகளில் 360 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளையும், 3000 ரன்களையும் கடந்த 8 வீரர்களில் வெட்டோரியும் ஒருவர். நியூஸிலாந்து அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் அவர் இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x